யூடியூப்பில் வெளியிடப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை
யூடியூப் தளம் ஒன்றில் வெளியான இனவாதம் மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இம்மாதம் 21ஆம் தேதி கிழக்கு -மேற்கு எம்ஆர்டி வழித்தட ரயில் ஒன்றில் இருந்த பெண் ஒருவர், பயணிகளை காணொளி படம் எடுத்து அவர்களின் இனம் பற்றி கேட்டது டுவிட்டரில் காணொளியாக வெளியாகி உள்ளது. பயணிகளால் தாம் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்த அப்பெண் அப்போது ரயிலில் இருக்கும் மலாய்க்காரர்களை கணக்கெடுத்ததாக காணொளியில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் தொடர்பில் போலிசுக்குப் புகார்கள் வந்ததாகவும் 57 வயதுப் பெண் புலன் விசாரணைக்கு உதவி வருவதாகவும் போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பெண்ணின் மனநிலை சோதிக்கப்பட்டு
வருவதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' அறிகிறது.
நிலப் போக்குவரத்து ஆணையத்தை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு
வாகனங்களுக்கான பதிவு அங்கீகாரக் குறியீடுகளை
வழங்குவது தொடர்பாக நிலப் போக்குவரத்து ஆணையத்தை ஏமாற்றியதாக இரு ஆடவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லோ இ யோக் லம், 66, சுவா செங் காங், 64, ஆகிய அவ்விருவரும் ஆணையத்தை ஏமாற்ற 2010 அக்டோபர் முதல் 2012 ஏப்ரல் வரை 21 சந்தர்ப்பங்களில் கூட்டுச்சதி செய்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. குற்றம் நிகழ்ந்த வேளையில் சின் டிரான்ஸ் இன்ஜினியரிங் என்னும் வாகனத் தயாரிப்பு நிறுவனத்தில் ஓட்டுநராக இவ்விரு ஆடவர்களும் வேலை செய்தனர். இவ்விரு ஆடவர்களின் செயல்களால் சின் டிரான்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாகனங்களின் எடை விவரத்தை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஜேஐசி வாகனச் சோதனை சேவைகள் நிறுவனத்தைச் சேர்ந்த சோதனை அதிகாரிகள் பொய்யாக சமர்ப்பிக்கும் நிலை ஏற்பட்டது. அதன் மூலம் அந்த வாகனங்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப விதிகளுக்கு உட்பட்டிருப்பதைப் போல நம்ப வைத்து ஆணையம் ஏமாற்றப்பட்டதாக லஞ்ச ஊழல் புலன்விசாரணைப் பிரிவு நேற்று முன்தினம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, டிரைலர்ஸ் எனப்படும் வாகனத் தொடர் ஊர்திகளுக்கு பதிவுக் குறியீடுகள் வழங்கப்பட்டன. பின்னர் மோசடி தெரியவந்தது. ஆடவர் இருவரும் 21 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர். சம்பந்தப்பட்ட இரு வாகனச் சோதனை அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டதா என்பது பற்றி நீதிமன்ற ஆவணங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சுவாவும் லோவும் முறையே மே 18 மற்றும் ஜூன் 8ஆம் தேதிகளில் விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றம் வர உத்தரவிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மோசடிக் குற்றத்திற்கும் மூன்றாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
குற்றத்தை ஒப்புக்கொள்ள நடிகர் டெரன்ஸ் காவ் இணக்கம்
சிங்கப்பூரின் முன்னணி நடிகர் டெரன்ஸ் காவ், 53, பாதுகாப்பு இடைவெளி விதிகளை மீறிய குற்றத்தை ஒப்புக்கொள்ள இணங்கி இருப்பதாக அவரது வழக்கறிஞர் நேற்று தெரிவித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற மீடியாகார்ப் கலைஞர் ஜெஃப்ரி ஸுவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின்போது விதிமீறல் சம்பவம் நிகழ்ந்தது. விழாவின் மற்றொரு விருந்தினர் லான்ஸ் லிம் சீ கியோங், 50, என்பவரும் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள இணக்கம் தெரிவித்ததாக கோரி வோங் என்னும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
ஐந்து பேருக்கு மேல் ஒன்றுகூடக் கூடாது என்னும் விதி நடப்பில் இருந்தபோது அதனை மீறியதாக காவ், லிம் ஆகிய இருவர் மீதும் கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்குகின்றனர். பிராடல் ரோடு அருகே டெய்ஸி ரோட்டில் அமைந்துள்ள தமது கொண்டோமினிய வீட்டில் அக்டோபர் 2ஆம் தேதி இரவு முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை நடைபெற்ற கொண்டாட்டத்தில் 12 பேர் வரை பங்கேற்க அனுமதித்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல முறையான காரணமின்றி கொண்டாட்ட பங்கேற்பாளர்களைச் சந்திக்க தமது வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்தை லிம் எதிர்நோக்குகிறார்.

