மாசுபடுத்தக்கூடிய புதைபடிவ எரிபொருளிலிருந்து மேலும் சுத்தமான எரிசக்தி மூலங்களுக்கு மாறுவதை முடுக்கிவிடுவதில் இவ்வாண்டு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள வருடாந்திர எரிசக்தி மாநாடு கவனம் செலுத்தும்.
சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரம் (சியூ) மாநாட்டை ஒவ்வோர் ஆண்டும் ஏற்பாடு செய்து வரும் எரிசக்தி சந்தை ஆணையம், நேற்று இதனை அறிவித்தது.
மேலும் நிலைத்தன்மைமிக்க, மீள்திறனுடைய அனைத்துலக எரிசக்தி அமைப்புமுறையை உறுதிப்படுத்த, இந்த மாற்றத்தின் முக்கியத்துவம் மாநாட்டு கருப்பொருள் மூலம் வலியுறுத்தப்படுவதாக ஆணையத்தின் தலைமை நிர்வாகி ஙியாம் ஷெ சுன் தெரிவித்தார்.
அத்துடன் சியூ மாநாட்டில் கலந்துகொண்டு இந்த எரிசக்தி உருமாற்றத்தால் ஏற்படக்கூடிய சவால்களையும் வாய்ப்புகளையும் குறித்து கருத்துகள் பகிர்ந்துகொள்ள அனைத்து எரிசக்தி பங்குதாரர்களுக்கு அழைப்பும் விடுத்தார்.
நவீன பருவநிலை மாற்றத்தின் பிரதான காரணியாக, மாசுபடுத்தும் புதைபடிவ எரிபொருள் உள்ளது. எரிசக்திக்காக மனிதன் இதைப் பெரிதும் சார்ந்திருக்கிறான். இதன் விளைவுகளை இப்போதே உணர முடிகிறது. அதிவேகமாக பனிக்கட்டிகள் உறைந்து வருவதால் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தட்பவெப்ப நிலைகள் அதிகரித்து வருகின்றன. அத்துடன் எதிர்பாராத வானிலை நிலவரங்கள் மேலும் கடுமையாகின்றன.
அதனால், கொவிட்-19 கொள்ளைநோயிலிருந்து நிலைத்தன்மைமிக்க ஒரு வழியில் மீண்டுவர முயலும் பல நாடுகளுக்கு, இந்தச் சார்புநிலையைக் குறைப்பதே பசுமை மீட்சியாக அமையும்.
இணையம் வாயிலாகவும் நேரடியாகவும் நடைபெறவுள்ள இந்த மாநாட்டுக்கு ஜூலை மாதம் முதல் முன்பதிவு தொடங்கும்.

