அடுத்த ஐந்து ஆண்டுகளில் 16,666 மரங்களை நடும் திட்டத்திற்கு, 'ஏஐஏ சிங்கப்பூர்' $5 மில்லியன் வழங்க உறுதியளித்துள்ளது.
சிங்கப்பூரில் ஒரு மில்லியனுக்கும் மேலான மரங்களை 2030ஆம் ஆண்டுக்குள் நடவேண்டும் என்ற தேசிய பூங்கா கழகத்தின் 'ஒன்மில்லியன்டிரீஸ்' இயக்கத்திற்கு ஆதரவாக, பூங்காக்களிலும் இயற்கைப் பாதுகாப்பு வனப்பகுதிகளிலும் இம்மரங்கள் நடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுவரை நிறுவனங்கள் வழங்கியதிலேயே ஆகப் பெரிய தொகை இந்த $5 மில்லியன் நன்கொடை. கழகத்தின் கீழ் இயங்கிவரும் பூந்தோட்ட நகர நிதியில் இத்தொகை சேர்க்கப்படும்.
'ஏஐஏ சிங்கப்பூர்' நிறுவனம் அதன் 90வது ஆண்டு நிறைவை சிங்கப்பூரில் கொண்டாடிய வேளையில், இந்த உறுதிமொழியை அளித்துள்ளது.
மேலும், தங்களின் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில், லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள 'ரோவர்'ஸ் பே' பகுதியில் நேற்று காலை 90 மரங்கள் நடப்பட்டன.
150 கிலோமீட்டர் நீளமுள்ள சுற்றுத்தீவு பாதை போன்ற பூங்கா இணைப்புகளின் பசுமையைக் கூட்டும் வகையில் நடப்படும் மரங்கள் அமையும் என்றார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ.
அத்துடன் கடந்த ஆண்டில் மட்டும் 200,000க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டதாகவும் அமைச்சர் லீ குறிப்பிட்டார்.

