கொவிட் 19 கிருமிப் பரவலில் இங்குள்ள வர்த்தகங்களையும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் உதவியதற்காக துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட்டுக்கு இவ்வாண்டின் ஆக உயரிய மே தின விருதான கௌரவப் பதக்கம் வழங்கப்பட்டது.
தொழிலாளர் இயக்கத்துக்கு உயரிய சேவையாற்றியுள்ள நபர்களுக்கு தேசிய தொழிற்சங்க காங்கிரசின் கௌரவப் பதக்கம் வழங்கப்படுகிறது.
கடந்தாண்டு ஐந்து வரவு செலவுத் திட்டங்களை அறிவித்து, பொருளியல் நெருக்கடியைச் சமாளிக்க நிறுவனங்களுக்கு பெருமளவு உதவியதில் அவர் ஆற்றிய பங்குக்காக திரு ஹெங் அந்த விருதைப் பெற்றார். ஊழியர்கள் தொடர்ந்து வேலைத் தகுதியுடன் இருக்கத் தேவையான திறன்களை அவர்கள் பெற உதவும் கொள்கைகளையும் திரு ஹெங் முன்னெடுத்தார்.
சிங்கப்பூரின் அடுத்த பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த திரு ஹெங், மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைத் தலைவர்களின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஒதுங்குவதாக இம்மாதம் 8ஆம் தேதி அறிவித்திருந்தார்.
கொவிட் 19 பரவல் இதற்கு முன் எப்போதுமில்லாத பொருளியல் நெருக்கடியை ஏற்படுத்தியது என்றும் அது நிதி அமைச்சு அதிகாரிகள் எதிர்நோக்கிய மிகப் பெரும் சவால் என்றும் திரு ஹெங், தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் லேபர்பீட் வலைப்பதிவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
பொருளியல் நெருக்கடியால் சில வர்த்தகங்கள் திடீரென்று நொடித்துப்போயின.
வேலையும் சம்பளமும் தொடருமா என்று ஊழியர்கள் அச்சப்பட்டனர். அவர்களுக்கு உதவ வழக்கமாக சில மாதங்களில் வகுக்கப்படும் வரவு செலவுத் திட்ட நடவடிக்கைகள் சில வாரங்களில் வகுக்கப்பட்டு, முடிந்தவரை சீக்கிரமாக நடப்புக்குக் கொண்டு வரப்பட்டதாக திரு ஹெங் தெரிவித்தார். தொழிலாளர் இயக்கத்துக்கு ஆற்றிய அரும்பணிக்காக நேற்று தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் திரு ஹெங் உள்ளிட்ட 143 பேருக்கு விருதுகளை வழங்கியது.
விருதுபெற்ற இந்தியர்கள்
தொழிற்சங்கவாதிகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'தொழிலாளர் தோழர்' எனப்படும் Comrade of Labour (Star) (Bar), விருதை நேற்று எரிசக்தி எரிவாயு தொழிற்சங்கத்தின் முன்னாள் கெளரவப் பொதுச் செயலாளர் அமரர் திரு சி. நாச்சியப்பன் பெற்றார். 'தொழிலாளர் தோழர்' (Star) விருது பெற்றவர்களில் சிங்கப்பூர் விமான நிலைய முனையச் சேவைகளின் தொழிற்சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அமரர் திரு சி.குணசேகரனும் அடங்குவார்.
வெவ்வேறு விருதுப் பிரிவுகளில் இடம்பெற்ற சில இந்தியர்கள்: டிலன் பிள்ளை சந்திரசேகரா, ஜெயம்ஸ் டிங்ரா, முருகேசன் ராஜேந்திரன், முகம்மது சிடிக், அ.மகேந்திரன், சி.தமிழ்வாணன், த.சிங்காரம், எம்.சோமசுந்தரம், கு.பூபாலன், கருப்பன் செட்டியார் பழனியப்பன், பூபதி நீ சதாசூ, ப.செல்வகுமார், பாலசுந்தர சிவபெருமான், பிலிப் தேவதாசன் சேமிமுள், சதீஷ்ஸ்ரீ நாயர், ஓம் அஜே அமர்.
"இவ்விருது கிடைத்ததில் பெருமிதம் கொள்கிறேன். தொழிலாளர்களுக்கு கூடுதல் உதவி புரிய வேண்டும் என்ற உற்சாகத்தை இது அளிக்கிறது," என்று தெரிவித்தார் தொழிலாளர் தோழர் விருது பெற்றவர்களில் ஒருவரான ரசாயனத் துறைகளின் தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் திரு அ.மகேந்திரன், 59. (கூடுதல் செய்தி:
ப. பாலசுப்பிரமணியம்)

