விபத்துக்குள்ளான வேன் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் நால்வருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டன. திங்கட்கிழமை மாலை ஜூரோங் ஹில் பகுதியில் நடந்த இவ்விபத்து தொடர்பில் 22 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆடவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறப்படுகிறது. 17 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு பயணிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அருகிலிருந்த புதருக்குள் வேன் சென்றதாகவும் பின் அது கவிழ்ந்ததாகவும் ஷின் மின் செய்தித்தாள் தெரிவித்தது.
அத்துடன் வேனில் மொத்தம் ஏழுப் பேர் இருந்தனர் என்றும் ஷின் மின் கூறியிருந்தது. அவர்களில் ஒருவர் நெருப்பிலிருந்து தப்பித்து ரத்த வெள்ளத்தில் இருந்தவாறு உதவி கோரியதாகவும் அந்தச் செய்தித்தாள் தெரிவித்தது.
எரியும் வாகனத்திலிருந்து கரும்புகை வருவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.