சிங்கப்பூர் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் (பிஎம்இ) ஆகிய பிரிவினருக்கு கைகொடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக, அவர்களுக்கு குறிப்பிட்ட சில வேலைகளை ஒதுக்குவது உள்ளிட்ட நடைமுறைகள் கருத்தில் கொள்ளப்படுவதாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.
'என்டியுசி இன்கம்' என்றும் அழைக்கப்படும் தனது காப்புறுதி நிறுவனம் மூலம் வேலையில்லாதோருக்கு ஒருவகை காப்புறுதித் திட்டம் ஒன்றை அமைக்க என்டியுசி யோசித்து வருவதாக திரு இங் இன்று (ஏப்ரல் 29) கூறினார்.
முதிர்ந்த வயது 'பிஎம்இ' பிரிவினருக்கு வேலையில்லாதபோதோ அவர்கள் திறன் மேம்பாட்டில் ஈடுபடும்போதோ இந்தத் திட்டம் அவர்களுக்கு ஆதரவளிக்கும் என்றார் திரு இங்.
நியாயமான பரிசீலனை ஏற்பாட்டையும் இதர அரசாங்கக் கொள்கைகளையும் நன்கு செயல்படுத்த மனிதவள நிபுணர்களுடன் சேர்ந்து அணுக்கமாகப் பணியாற்றவும் என்டியுசி விரும்புகிறது.
என்டியுசி மற்றும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவை தலைமை தாங்கும் 'பிஎம்இ' பணிக்குழு இதுவரை செய்திருக்கும் பணிகள் குறித்த விவரங்களை திரு இங் பகிர்ந்தார். அந்தப் பணிக்குழு கடந்த ஆண்டு அக்டோபரில் அமைக்கப்பட்டது.