பேநவ் தளத்தைப் பயன்படுத்தி ஒருவர் மற்றொருவரின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பலாம். தாய்லாந்தில் இந்தச் சேவையை பிரோம்ப்ட்பே வழங்குகிறது.
இரு சேவைகளும் தற்போது ஒன்றிணைந்துள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் தாய்லாந்து வங்கியும் நேற்று தெரிவித்தன.
இருநாடுகளைச் சேர்ந்த இதுபோன்ற தளங்கள் ஒன்றிணைந்திருப்பது இதுவே உலகில் முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பேநவ் திட்டத்தில் பங்கெடுக்கும் 12 வங்கிகளில் மூன்று வங்கிகள் தாய்லாந்தின் பிரோம்ப்ட்பே
யுடனான கூட்டு முயற்சியில் பங்கெடுக்கின்றன.
சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கி, ஓசிபிசி வங்கி, யுஓபி வங்கி ஆகியவை தாய்லாந்தின் பேங்காக் வங்கி, காசிகோர்ன் வங்கி, குருங் தாய் வங்கி, சயேம் வர்த்தக வங்கி ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகின்றன.
இந்தத் திட்டத்தில் மேலும் பல வங்கிகள் படிப்படியாகச் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு வசதியாக அனுப்பப்படும் தொகையின் வரம்பு
நீட்டிக்கப்படும்.

