சிங்கப்பூரில் டெங்கி பிரச்சினை கடந்தாண்டு முற்பகுதியைக் காட்டிலும் இவ்வாண்டு முற்பகுதியில் தணிந்ததுபோல் இருந்தாலும், டெங்கி சம்பவங்கள் அதிகமாவதைத் தடுக்க விழிப்புடன் இருக்கும்படி தேசிய சுற்றுப்புற வாரியம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
கொசுக்கள் முட்டையிடும் இடங்களை ஒழித்து, தொடர்ந்து விழிப்புடன் இருப்பதை ஊக்குவிக்கும் தேசிய டெங்கி தடுப்பு இயக்கத்தை ஆணையம் நேற்று தொடங்கியது.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டின் முதல் பாதியில் சுமார் 10,000 டெங்கி தொற்றுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இவ்வாண்டு இதுவரை இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட டெங்கி சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
வரும் மாதங்களில் வெப்பநிலை அதிகமாகும்போது, டெங்கிச் சம்பவங்கள் அதிகமாகும் என்று வாரியம் எதிர்பார்க்கிறது.
ஜூன் முதல் அக்டோபர் வரையிலான மாதங்கள் வெப்பமானவை. அப்போது ஏடீஸ் கொசுக்கள் வேகமாக வளர்வதோடு, டெங்கி கிருமி கொசுக்கிடையே இன்னும் விரைவாகப் பரவும். அதனால் இம்மாதங்களில் டெங்கித் தொற்று அதிகமாகக் காணப்படும்.
டெங்கி கிருமியைப் பரப்பும் வளர்ந்த ஏடீஸ் எகிப்தி கொசுக்கள் சில வட்டாரங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அத்துடன் சிங்கப்பூரில் இதுவரை அதிகம் காணப்படாத 3ஆம், 4ஆம் டெங்கி கிருமி வகைகள் இப்போது இங்கு அதிகம் பரவி வருகின்றன. இவற்றால் நிலைமை மோசமாகக் கூடும்.
இந்த டெங்கி கிருமி வகைகளுக்கு எதிராக இங்குள்ளவர்களுக்கு இன்னும் நோய்த்தடுப்பாற்றல் ஏற்படாததால் அதிகமானோருக்கு டெங்கி தொற்றும் சாத்தியம் உள்ளது.
இவ்வாண்டு டெங்கி தடுப்பு இயக்கம் தொடங்கியதைக் குறிக்க நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்கான துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் ஹாலந்து புக்கிட் தீமா குழுத்தொகுதியின் ஹெங்ஹுவா பிரிவில் உள்ள சில இல்லங்களுக்குச் சென்றார்.
அண்மைய வாரங்களில் டெங்கிச் சம்பவங்கள் உயர்ந்து வருவதாக அவர் கூறினார்.