சிங்கப்பூருக்கு ஐரோப்பா மூன்று வழிகளில் இயற்கையான பங்காளியாக இருக்க முடியும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
வர்த்தகங்கள் நன்கு ஊன்றுவதற்குத் தேவையான பாதுகாப்பான, நம்பகமான சுற்றுச்சூழலை வழங்குவது அவற்றில் ஒன்று.
மின்னிலக்கம் மூலம் மக்கள், வர்த்தகங்கள், யோசனைகளை இணைப்பது இரண்டாவது வழி, பசுமையான பொருளியல் வளர்ச்சிக்கு நிலைத் தன்மையை நோக்கி செயல்படுவது மூன்றாவது வழி.
சிங்கப்பூரில் ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள கிராண்ட் ஹையட் ஹோட்டலில் நடைபெற்ற ஐரோப்பிய வர்த்தக தொழில்சபையின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.
பாதுகாப்பான, நம்பகமான சூழலை வழங்குவது குறித்து விளக்கிய திரு சான், முதலீட்டு வாய்ப்புகளைப் பரிசீலிக்கும்போது பெரும்பாலான நிறுவனங்களுக்கு புவியியல் அரசியல் முன்னணி வகிக்கிறது.
எல்லை தாண்டிய விநியோகச் சங்கிலி ஒரு ெபரிய மறுசீரமைப்பை எதிர்நோக்குகிறது.
நிறுவனங்கள் தங்களுடைய நிலையை எப்படி சீரமைத்துக் கொள்ளலாம் என்று யோசிக்கும் வேளையில் அமைவிடம் ஒரு கேள்வியாக இருக்காது.
ஆனால் நம்பிக்கையும் மதிப்பும் முக்கியம்.
அந்த வகையில் சிங்கப்பூர் அதன் நம்பகமான வர்த்தகங்களால் ஓர் அனைத்துலக வர்த்தக மையமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளதாக திரு சான் கூறினார்.
மின்னிலக்கமயமும் மின்னிலக்க வர்த்தகமும் முதலீடு, மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்கியுள்ளன.
அதற்கு கூகல், தெமாசெக், பைன் ஆகியவற்றின் அண்மைய ஆய்வுகளை அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த ஆய்வுகளில் 2025ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசியாவின் மின்னிலக்கப் பொருளியல் 100 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 300 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் மும்மடங்கு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரும் இந்த வளர்ச்சியில் பங்கேற்று வருகிறது. நீண்டகால அடிப்படையில் பருவநிலை மாற்றமும் வாய்ப்புகளை உருவாக்கும்.
குறிப்பாக, பசுமை பொருளியல் புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பாவுடன் நெருக்கமாகச் செயல்பட சிங்கப்பூர் ஆர்வமாக உள்ளது. ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களின் பங்காளியாகவும் இருக்க சிங்கப்பூர் ஆர்வமுடன் இருப்பதாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் மேலும் தெரி வித்தார்.

