வர்த்தக எதிர்பார்ப்புகள் குறித்து முதலாம் காலாண்டு ஆய்வுகள்
தற்போது நடைமுறையில் உள்ள கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தால் ஏற்படவுள்ள வர்த்தக வாய்ப்புகள் குறித்து சிங்கப்பூர் நிறுவனங்கள் உற்சாகம் தெரிவித்துள்ளன. பொருளியல் வளர்ச்சிக் கழகம் (இடிபி), புள்ளிவிவரத் துறை (சிங்ஸ்டேட்) இரண்டும் இவ்வாண்டின் முதலாம் காலாண்டுக்கான இரு வேறு ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டதில் இது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவுகளில் உள்ள நிறுவனங்கள் தங்களின் வர்த்தக எதிர்பார்ப்புகள் மீது கொண்டுள்ள நம்பிக்கை கூடியுள்ளது.
அடுத்த ஆறு மாதங்களில் வர்த்தக நிலவரம் மேம்படும் என்று 41% உற்பத்தியாளர்கள் தெரிவித்திருந்தனர். இருப்பினும் வர்த்தகம் வலுவற்ற நிலையில் இருக்கும் என்று 3% கூறியிருந்ததாக இடிபி ஆய்வு தெரிவித்தது.
தங்களுக்குச் சாதகமான வர்த்தக நிலவரம் ஏப்ரல் மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் என்று 38% உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. முந்தைய காலாண்டில் இது 32 விழுக்காடாக இருந்தது.
நம்பிக்கை தரும் வர்த்தக நிலவரம் ஏற்படும் என்று மின்னணுவியல் துறை நிறுவனங்களே அதிக நம்பிக்கை தெரிவித்திருந்தன. 66% நிறுவனங்கள் இவ்வாறு கூறின.
சேவைப் பிரிவிலும் அதே நம்பிக்கை காணப்பட்டது. மேலும் சாதகமான ஒரு வர்த்தக நிலவரத்தை எதிர்பார்ப்பதாக 11% சேவைப்பிரிவு நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. முந்தைய சிங்ஸ்டேட் ஆய்வில் இது 7 விழுக்காடாக இருந்தது.
அடுத்த ஆறு மாதங்களில் வர்த்தக நிலவரம் மேம்படும் என்று எதிர்பார்ப்பதாக சேவைப் பிரிவு சார்ந்த தகவல்தொடர்பு, நிதி மற்றும் காப்புறுதி, மொத்த விற்பனை வர்த்தகத் துறைகள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, வலுவற்ற வர்த்தகச் சூழலே ஏற்படும் என்று ஹோட்டல் மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகள் எதிர்பார்ப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
எல்லைக் கட்டுப்பாடுகள், மூடல்களுக்கு இடையே தேவை குறையும் என்று ஹோட்டல் துறையினர் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தேவை குறைந்திருப்பதால் வேலைவாய்ப்பு அளவும் குறையும் என்று ஹோட்டல் துறை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
இருப்பினும், இவ்வாண்டு முதல் காலாண்டில் இருந்தது போலவே இரண்டாம் காலாண்டிலும் வேலைவாய்ப்பு நிலை இருக்கும் என்று உற்பத்திப் பிரிவின் 77% நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

