வரும் ஜூன் 30ஆம் தேதியிலிருந்து மின்-ஸ்கூட்டர், மின்-மிதிவண்டிக்கு இணையம் வழி தேர்வு கட்டாயமாக்கப்படுகிறது.
அதற்குத் தேவையான கையேடுகள் இணையம் வழியாக வெளியிடப்படும் என்று நேற்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. இரு வகை ஓட்டுநர் களுக்கும் மூன்று பாடங்களை உள்ளடக்கிய தேர்வு இருக்கும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
நடமாடும் சாதனங்கள் பற்றிய பொது விவரங்கள், பயணத்துக்கு முந்திய ஏற்பாடு, சாதனத்தை பரிசோதித்தல், மின்-ஸ்கூட்டர், மின்- சைக்கிள் ஆகியவற்றுக்கான விதிமுறைகள், கோட்பாடுகள் போன்றவை தொடர்பான கேள்விகள் தேர்வில் கேட்கப்படும்.
இணையம் வழியாக நடத்தப்படும் தேர்வு, பல பதில்களில் சரியானவற்றை தேர்வு செய்யும் வகையில் அமைந்திருக்கும் என்று நேற்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் ஆணையம் தெரிவித்தது.
இது குறித்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று அது கூறியது.
கடந்த காலங்களில் நடமாடும் சாதனங்களால் விபத்துகள் அதிகரித்தன. மின்-ஸ்கூட்டருடன் மோதிய சைக்கிளோட்டி ஒருவர் மரணமடைந்தார். அந்த மின்-ஸ்கூட்டர் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து நடமாடும் சாதனங்களுக்கான ஆலோசனைக் குழு, கடந்த 2019 செப்டம்பரில் கட்டாயத் தேர்வுக்கு பரிந்துரை செய்தது.
இந்த நிலையில் ஆணையத்தின் தேர்வு பற்றிய அறிக்கை வெளியாகியுள்ளது.
சென்ற புதன்கிழமை போக்கு வரத்து அமைச்சின் மூத்த நாடாளு மன்றச் செயலாளர் பே யாம் கெங் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் பாதுகாப்பாக வாகனத்தை ஓட்ட தேர்வு உதவியாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
"மின்-ஸ்கூட்டர் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் மிதிவண்டி ஓட்டுநர்களுக்கு விதிமுறைகள், நடத்தைக் கோட்பாடுகளை நன்கு அறிந்து வைத்திருப்பதையும் மற்றவர்களுடன் பாதையை பொறுப்பான முறையில் பகிர்ந்து கொள்வதையும் தேர்வு உறுதிப்படுத்தும்," என்றும் அவர் தெரிவித்தார்.
மின்-ஸ்கூட்டர், மின்-மிதிவண்டி ஓட்டுநர்களுக்கு கையேடுகள் இதர மொழிகளிலும் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

