கொள்கைபிடிப்புள்ளவர், தன்னலமற்றவர், நேர்மையானவர்.
இப்படி பல தொழிற்சங்கவாதி களின் மதிப்பை பெற்றவர் 40 ஆண்டுகளாக சேவையாற்றிய தொழிற்சங்கவாதி அமரர் திரு சி.நாச்சியப்பன்.
1980களில் பொதுப் பயனீட்டுக் கழக ஊழியர் சங்கத்தில் அவரது தொழிற்சங்கப் பணி துவங்கியது.
பொதுப் பயனீட்டுக் கழகத்தின் எரிசக்தி, எரிவாயு துறைகளை நிறுவன ரீதியாக மாற்றியமைத்ததில் புதிய எரிசக்தி, எரிவாயு தொழிற்சங்கம் 1995ல் உருவானது.
அதன் தோற்றுவிப்பு உறுப்பினரான திரு நாச்சியப்பன் அச்சங்கப் பொது செயலாளராக 1999 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டார்.
கடந்த 2001ஆம் ஆண்டில் சங்கத்தை ஆதரிக்கும் நிறுவனங்கள் தங்களது ஒட்டுமொத்த பயிற்சி தொகையிலிருந்து 20% தொழிற்சங்கம் ஆதரவில் நடக்கும் பயிற்சி களுக்கு ஒதுக்க காரணமாக இருந்த இவர், இதனால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற்றனர்.
எரிசக்தி துறையில் சிங்கப்பூர் தொழிலாளர் திறன் தகுதி (WSQ) கட்டமைப்பு 2010ஆம் ஆண்டில் அறிமுகமாவதற்கு துறை சார்ந்த பங்காளிகள், எரிசக்தி சந்தை ஆணையம், சிங்கப்பூர் ஊழியரணி ஆகியவற்றோடு அணுக்கமாக செயல்பட்டு சாத்தியமாக்கினார்.
நிறுவன நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, குறைந்த வருமானம் ஈட்டும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு கூடுதல் சம்பளம் பெறுவதற்கு வழி வகுத்தார்.
2015ஆம் ஆண்டு முதல் தொழிற்சங்கத்தின் கெளரவ பொது செயலாளராக பொறுப்பு வகித்த திரு நாச்சியப்பன் 67 வயதில் கடந்த மார்ச் மாதம் காலமானார்.
இவரைப் போன்று 1978ல் தமது தொழிற்சங்க சேவையைத் தொடங்கி பல்லாண்டு காலமாக தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்தவர் அமரர் திரு சி.குணசேகரன். சிங்கப்பூர் விமான நிலைய முனையச் சேவை தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக ஊழியர்களின் நல்வாழ்வுக்கு பெரும் பங்களித்துள்ளார்.
60 மற்றும் 62 வயதுகளில் சம்பளக் குறைப்பை அகற்றவும் 2011ஆம் ஆண்டில் மறுவேலை வாய்ப்பு முறையை அறிமுகம் செய்வதிலும் இவர் பெரும் பங்கு ஆற்றினார்.
மூத்த ஊழியர்களின் பங்களிப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர், சேட்ஸ்(SATS) நிறுவனத்தில் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து சம்பள உயர்வையும் ஊக்கத்தொகைகளையும் மற்ற ஊழியர்கள் போல அனுபவிப்பதற்கு முக்கிய காரணமாக விளங்கினார்.
சாங்கி விமான நிலையத்தில் பணியாற்றும் முன்னிலை அல்லாத ஊழியர்களுக்கு நடமாடும் உணவு கடை (mobile food kiosk) அறிமுகம் செய்வதற்கு ஆதரவு வழங்கினார்.
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் வேலையிட பாதுகாப்பு சுகாதாரக் குழு, தொழில்துறை உறவுமுறை குழு (சேவை துறை), அனைத்துலக உறவுமுறை குழு என பல குழுக்களில் சேவையாற்றி தொழிலாளர் இயக்கத்திற்கும் முத்தரப்பு முயற்சிகளும் அயராது தோள் கொடுத்தார். 2016ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் விமான நிலைய முனையச் சேவைகளின் தொழிற்சங்கத்தில் பங்காற்றியவரின் பங்களிப்பு என்றென்றும் மறக்க முடியாதது.
அதனை நினைவுகூரும் வகையில் இவ்வாண்டின் மே தின விருது களில், தொழிலாளர் தோழர் (நட்சத்திரம்) (பார்) விருது அமரர் திரு நாச்சியப்பனுக்கும் தொழிலாளர் தோழர் (நட்சத்திரம்) விருது அமரர் திரு குணசேகரனும் வழங்கப்பட்டது.

