சண்முகம்: கவனமாக இல்லை எனில் இனவாதம் பழகிவிடும்

சண்முகம்: கவனமாக இல்லை எனில் இனவாதம் பழகிவிடும்

3 mins read
9b4dc222-47b5-4d73-8b9a-ffb821641335
சிங்கப்பூரில் நிகழும் எந்தவோர் இனவாத நடத்தையையும் மன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கண்டிக்கவேண்டும் என அமைச்சர் சண்முகம் வலியுறுத்தினார். படம்: GOV.SG -

சிங்கப்பூர் கவனத்துடன் செயல்படாவிட்டால் இனவாதம், வெளிநாட்டினர் மீதான வெறுப்பு போன்றவை வழக்கமானவையாக மாறிவிடும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நிகழும் எந்தவோர் இனவாத நடத்தையையும் மன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கண்டிக்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

"பெரும்பாலான சிங்கப்பூரர்கள் கண்ணியமானவர்கள். இனவாதத் தொடர்பில்லாதவர்கள். இருப்பினும் இனவாத நெருப்பு கிளறிவிடப்படுவது தொடர்ந்தால் நமது நிலைமை அதிக இக்கட்டில் சிக்கிவிடும்," என்றார் திரு சண்முகம்.

மேலும் அவர் தமது உரையில் குறிப்பிடுகையில், "இனவாதத்தையும் வெளிநாட்டவர் மீதான வெறுப்புணர்வையும் வழக்கமான செயல்களாக அனுமதித்தால் சிங்கப்பூர் தோற்றுவிடும். அது நாம் இதுவரை அடைந்த வெற்றிக்கும் சிங்கப்பூரர்கள் என்னும் பெருமைமிகு நிலைக்கும் முரணாக அமைந்துவிடும்," என்றார்.

கொள்ளைநோய் பரவல் காலத்தில் எழும் இனவாதப்போக்கை முளையிலேயே கிள்ளிவிடக் கூடிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்னனென்ன என்று வினவிய புக்கிட் பாத்தோக் உறுப்பினர் முரளி பிள்ளைக்கு திரு சண்முகம் பதில் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை மாது ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம், அந்த மாதின் கூற்றுப்படி இனவாதச் செயலாகத் தோன்றுகிறது என்றார் அவர்.

திருவாட்டி ஹிண்டோச்சா நீட்டா விஷ்ணுபாய், 55, என்னும் அந்த மாது சுவா சூ காங் விளையாட்டுத் திடல் நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் வேகநடையில் ஈடுபட்டிருந்தபோது 30 வயது ஆடவர் ஒருவர் குறுக்கிட்டார்.

அந்த மாது முகக்கவசத்தை மூக்கிற்குக் கீழ் அணிந்திருந்ததைச் சுட்டிக்காட்டி உரக்க சத்தமிட்ட அந்த ஆடவர், இன ரீதியான அவமதிப்பு செய்ததாகவும் தொடர்ந்து மாதின் நெஞ்சில் அவர் உதைத்தாகவும் கூறப்பட்டது. உடற்பயிற்சியில் தாம் ஈடுபட்டிருப்பதாக மாது கூறியதையும் மீறி தாக்குதல் நடந்ததாகச் சொல்லப்பட்டது. அதன் காரணமாக மாதின் கைகளில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.

தனியார் துறை துணைப்பாட ஆசிரியரான அந்த இந்திய சிங்கப்பூரர், அன்றிரவே சம்பவம் குறித்து போலிசில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து 30 வயது ஆடவர் இன்று (மே 11) கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை தொடருகிறது.

இச்சம்பவம் தொடர்பில் மன்றத்தில் பேசிய திரு சண்முகம், மற்ற நாடுகளைப் போலவே சிங்கப்பூரிலும் இனவாதம் இருக்கும் வேளையில் அண்மைக்காலமாக இங்கும் உலக அளவிலும் அந்தப் பிரச்சினை கிளறப்படுகிறது என்றார்.

"கிருமிக்கு எந்த நாடும் சொந்தமில்லை என்றபோதிலும் கொள்ளைநோய் பரவலுக்கு மத்தியில் 'சீனக் கிருமி' என்றும் 'வூஹான் கிருமி' என்றும் கொரோனா கிருமிக்குப் பெயர்சூட்டி அமெரிக்காவில் ஆசிய மக்கள், குறிப்பாக சீனர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

"இதனை நாம் கண்டிக்கிறோம். அதேபோல சிங்கப்பூரிலும் அதற்கு நிகரான செயல்களை நாம் கண்டித்தாக வேண்டும்.

"தங்களது வேலைகளை வெளிநாட்டினர் எடுத்துக்கொள்வதாக சிங்கப்பூரர்கள் நியாயமாகக் கவலைப்படுவது உண்டு.

"வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதற்குச் சாதகமாகவும் உள்ளூர் மக்களிடம் காட்டப்படும் பாகுபாடு காரணமாகவும் நடத்தப்படும் நியாயமற்ற வேலைவாய்ப்பு நடைமுறைளால் இதுபோன்ற கவலைகள் எழுகின்றன.

"சிறுபான்மையினரே இதுபோல நடந்துகொள்கிறார்கள் என்றாலும் அதனால் சிங்கப்பூரர்களுக்கு வருத்தமே," என்று கூறிய அமைச்சர் சண்முகம், இதுபோன்ற தவறான நடைமுறைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகச் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்