சாங்கி பொது மருத்துவமனை
யிலும் இங் டெங் ஃபோங் மருத்துவமனையிலும் தலா ஓர் ஊழியருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இரு மருத்துவமனைகளும் கிருமிப் பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்த இரண்டு மருத்துவ
மனைகளின் ஊழியர்களுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதை சுகாதார அமைச்சு நேற்று முன்
தினம் இரவு உறுதி செய்தது. இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறை தொழில்நுட்பராகப் பணியாற்றும் 42 வயது மலேசிய ஆடவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்ட அவர் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதியன்று சிங்கப்பூர் திரும்பினார். ஜனவரி 24ஆம் தேதி வரை தமக்கு விதிக்கப்பட்ட இல்லத் தனிமை உத்தரவை அவர் நிறைவேற்றினார்.
ஜனவரி 23ஆம் தேதியன்று அவருக்கு கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்குக் கிருமித்தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் 21ஆம் தேதியன்று அவருக்கு இருமல் ஏற்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து, இம்மாதம் 10ஆம் தேதியன்று அவர் மருத்துவ உதவி நாடினார். அதற்குள் இருமல் மோசமடைந்துவிட்டது. இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் உள்ள ஊழியர்
களுக்கான மருந்தகத்தில் அவருக்கு கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஆடவர் தற்போது இங் டெங் ஃபோங் மருத்துவ
மனையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக இங் டெங் ஃபோங் மருத்துவமனையை நிர்வகிக்கும் ஜூரோங் ஹெல்த் வளாகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
அவர் கடைசியாக இம்மாதம் 10ஆம் தேதியன்று மருத்துவமனையில் பணிபுரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு முன்பே கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் அவரிடமிருந்து மற்றவர்
களுக்குக் கிருமி பரவும் அபாயம் குறைவாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. டான் டோக் செங் கொவிட்-19 குழுமத்துடன் அவருக்குத் தொடர்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட ஆடவரின் குடும்பத்தினருக்கும் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த ஆடவர் மருத்துவ
மனையில் சென்ற அனைத்து இடங்களையும் கிருமி நாசினி திரவத்தைக் கொண்டு சுத்தம் செய்து விட்டதாக இங் டெங் ஃபோங் மருத்துவமனை கூறியது.
"எங்களது நோயாளிகள், ஊழியர்கள், நோயாளிகளைக் காண மருத்துவமனைக்கு வருபவர்கள் ஆகியோரைப் பாதுகாப்பாக வைத்திருக்க மிகக் கடுமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட ஊழியருக்கு எங்கள் முழு ஆதரவு வழங்கப்படும்," என்று ஜூரோங் ஹெல்த் வளாகம் கூறியது. இது ஒருபுறம் இருக்க, சாங்கி பொது மருத்துவ
மனையில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்த 43 வயது பெண்ணுக்கும் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
சாங்கி விமான நிலையத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழுமத்தைச் சேர்ந்த ஒருவருடன் இப்பெண்மணி ஒரே வீட்டில் வசித்தார். பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் இப்பெண் இம்மாதம் 8ஆம் தேதியன்று தனிமைப்
படுத்தப்பட்டார். மறுநாள் அவருக்கு இருமல் ஏற்பட்டது. இதையடுத்து, தம்மிடம் தென்பட்ட கொவிட்-19 அறிகுறிகள் பற்றி சுகாதார அமைச்சிடம் அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அவருக்குக் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இம்மாதம் 10ஆம் தேதியன்று உறுதி செய்யப்பட்டது.
உருமாறிய பி1617 வகை கிருமி யால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆரம்பகட்ட மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் உள்ள நோயாளி
களுடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேரடித் தொடர்பு இல்லை என்று சாங்கி பொது மருத்துவமனை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டபோது முழுப் பாதுகாப்பு ஆடை அணிந்திருந்ததாக மருத்துவமனை தெரிவித்தது. பாதிக்கப்பட்ட பெண் இருமுறை கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோரை அடையாளம் காணும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

