2017ல் விரைவுச்சாலை மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம்: ஊழியர்கள் இருவருக்குச் சிறை
தீவு விரைவுச்சாலையில் கடந்த 2017ஆம் ஆண்டு மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பில் ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு அதிகபட்சமாக $1 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அப்பர் சாங்கி ரோடு ஈஸ்ட்டில் உள்ள கட்டி முடிக்கப்படாத அந்த மேம்பாலம் 2017 ஜூலை 14ஆம் தேதி இடிந்து விழுந்ததில் சீன ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்; ஊழியர்கள் பத்துப் பேர் காயமுற்றனர்.
அச்சம்பவம் தொடர்பில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, நியாயமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாகக் கூறி, 'ஆர் கிம் பியாவ் (ஓகேபி) கான்ட்ராக்டர்ஸ்' நிறுவனத்திற்கு ஒரு மில்லியன் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், திட்ட இயக்குநர் யீ சீ கியோங், 51, என்பவருக்கு 13 மாதங்களும் திட்டப் பொறியாளர் வோங் கியூ ஹை, 32, என்பவருக்கு 11 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அறுபது நாள் விசாரணையின் முடிவில் அந்நிறுவனமும் அந்தப் பணியாளர்கள் இருவரும் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டது.
கட்டுமானத்தில் விரிசல் காணப்பட்டபோதும் அனைத்துப் பணிகளையும் நிறுத்தத் தவறி, ஊழியர்களை ஆபத்தான நிலைக்குத் தள்ளி, அவ்விரு பணியாளர்களும் பொறுப்பின்றி நடந்துகொண்டதாக நீதிமன்றம் முன்னதாகத் தெரிவித்து இருந்தது. அத்துடன், அவர்கள் விபத்து தொடர்பான குறுஞ்செய்திகளையும் படங்களையும் அழித்துவிட்டதாகவும் அதிகாரிகளிடம் பொய்யுரைத்ததாகவும் கூறப்பட்டது.
விபத்து தொடர்பில் 2018ஆம் ஆண்டில் முதன்மை ஒப்பந்ததாரரான ஓகேபி நிறுவனம் மீதும் தனிநபர்கள் நால்வர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.
மேம்பாலத்திற்கான கட்டுமானப் பணித்திட்டங்களைத் தயார் செய்த பொறியாளரான இந்தோனீசியாவின் ராபர்ட் அரியாந்தோ டியாண்ட்ரா, 47, அந்தக் கட்டுமானத்திற்கான அங்கீகாரம் பெற்ற சோதனையாளர் லியோங் சோ ஹான், 62, ஆகியோர் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவர்.
2019ல் குற்றத்தை ஒப்புக்கொண்ட டியாண்ட்ராவுக்கு 86 வார சிறையும் $10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல, லியோங்கிற்கு ஆறு மாத சிறை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து, அவர் தொடுத்த மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டது.

