இரண்டாவது ஆண்டாக நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் சிங்கப்பூரில் ஆரவாரமின்றி கட்டுப்பாடுகளுடன் நடக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. சமூக ஒன்றுகூடல்களில் கட்டுப்பாடு இருப்பதுடன் பள்ளிவாசல்களின் கூட்டுத் தொழுகைக்காக வருவோரின் எண்ணிக்கையிலும் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் அமைந்துள்ள யூசோஃப் இஷாக் பள்ளிவாசலுக்கு நேற்று காலை வருகை அளித்திருந்த இஸ்லாமிய சமயத் தலைவர் முஃப்தி நசிருதீன் முகம்மது நசிர், தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தினார்.
"நம் மூத்தோர், உறவினர்கள், சமூகத்தினர் அனைவரையும் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்போம். இந்த விழாக் காலத்தில் மட்டுமல்லாமல் அதற்குப் பின்னும் தொற்றுகள் ஏற்படும் நிலையை நாம் தவிர்க்கப் பார்ப்போம்," என்றார் அவர்.
சென்ற ஆண்டு நோன்புப் பெருநாள் மே 25ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது. அப்போது சிங்கப்பூரில் அதிரடி கிருமி முறியடிப்பு காலகட்டம். சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்), ஒன்றுகூடல்களுக்குத் தடைவிதித்திருந்தது.
அத்துடன் சிங்கப்பூரின் 70 பள்ளிவாசல்களும் அந்த காலகட்டத்தில் மூடப்பட்டன.
இவ்வாண்டு பள்ளிவாசல்களில் சிறப்பு நோன்புப் பெருநாள் தொழுகைகள் இருந்தும் முஸ்லிம்கள் பலர் அவற்றில் கலந்துகொள்ள முடியவில்லை என்பதை டாக்டர் நசிருதீன் குறிப்பிட்டார்.
"ஆனால் இதை நாம் இரு வேறு விதமாக அணுகலாம். இவ்வாண்டின் நோன்புப் பெருநாளை ஓர் இழப்பாக நாம் பார்க்கலாம், அல்லது நமக்கு வாய்த்துள்ள இறையருளை ஏற்றுக்கொண்டு நன்றியுணர்வுடன் கொண்டாடலாம்," என்று தம் விளக்கப் பேருரையில் அவர் சொன்னார். பள்ளிவாசல்களுக்கு வர முடியாமல் போனவர்கள், முஃப்தியின் உரையை, 'யூடியூப்' வழி நேரலையாகக் காண முடிந்தது.
சமூகத் தொற்றுகள் அண்மைய காலமாக அதிகரித்து வருவதைக் கருதி மே 8 முதல் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. மே 30 வரை ஐவர் கொண்ட குழுக்களாக மட்டுமே மக்கள் ஒன்றுகூட அனுமதிக்கப்படும். இந்த எண்ணிக்கை முன்னதாக எட்டாக இருந்தது.
புதிய கட்டுப்பாடுகளின்படி பள்ளிவாசல்களில் நடக்கும் ஒவ்வொரு கூட்டு தொழுகையிலும் 100 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். இது முன்னதாக 250 ஆக இருந்தது.
பள்ளிவாசலுக்குள் வரும் 100 பேரும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட நிலையில் தங்கள் தொழுகையில் ஈடுபடுவர்.
இதே கட்டுப்பாடுகள் நேற்று காலை நடைபெற்ற சிறப்பு நோன்புப் பெருநாள் தொழுகைகளின்போதும் பெரும்பாலான பள்ளிவாசல்களில் கடைப்பிடிக்கப்பட்டன.

