கடுமையான கொவிட்-19 கட்டுப்பாடுகள் மீண்டும் நடப்புக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இக்கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் 30 தங்குவிடுதிகளைச் சேர்ந்த சுமார் 2,600 வெளிநாட்டு ஊழியர்களுக்கு, நோன்புப் பெருநாளை முன்னிட்டு நேற்று தடபுடல் விருந்தும் இலவச 'லுங்கி'யும் வழங்கப்பட்டது.
துவாஸ் தங்குவிடுதி ஒன்றுக்கு நேற்று வருகை அளித்த சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் துணை முஃப்தி உஸ்தாஸ் முகம்மது ஹனான் ஹசான், கிருமித்தொற்று சம்பவங்களைக் குறைந்த எண்ணிக்கையில் வைத்திருக்க உதவியதற்காக கட்டுமான ஊழியர்களுக்குத் தமது நன்றியைத் தெரிவித்தார்.
துவாஸ் தங்குவிடுதியில் 100 பேருக்கு இலவச உணவும் லுங்கிகளும் வழங்கப்பட்டன.
"கொவிட்-19 பரவலுக்கு முன்னர், நோன்புப் பெருநாளன்று அவர்கள் திடல்களில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டும் நண்பர்களுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழித்துக்கொண்டும் இருப்பர். ஆனால், இப்போது அவர்கள் அவ்வாறு செய்ய முடியாமல் போனது. இந்தச் சிரமமான காலகட்டத்தில் அவர்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம். இந்த நிலையைக் கடந்துவர உற்சாகம் தருகிறோம்," என்றார் டாக்டர் ஹனான். காலைத் தொழுகையைச் சென்ற ஆண்டு செய்ய முடியாமல் போன நிலையில் இவ்வாண்டு கட்டுப்பாடுகளுடன் தொழுகையை நிறைவேற்ற முடிந்தது தொடர்பில் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் அவர்.
"அனைவரும் வெளியே சென்று உறவினர்களைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது. ஆனால், நாம் இதை ஓராண்டாக கடந்து வந்துவிட்டோம். அதனால் தொடர்ந்து பொறுமை காப்போம்," என்றார்.
'Alliance of Guest Workers Outreach' அமைப்பு இந்த வருடாந்திர விழாக்கால விநியோக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
நோன்புப் பெருநாளுக்கு முன்பே அமைப்பு 14 தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு, அன்பளிப்பு ஆகியவற்றை விநியோகம் செய்யத் தொடங்கிவிட்டது. இந்த 14 தங்குவிடுதிகளில் இருப்போர், வேலைக்காக மட்டுமே தங்களின் இருப்பிடத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டது.