கொவிட்-19 கட்டுப்பாடுகளுடன் இரண்டாவது நோன்புப் பெருநாளை இங்குள்ள முஸ்லிம்கள் கொண்டாடி வர தங்களின் மீள்திறனைக் காட்டியுள்ளதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார்.
"சமூகத் தொற்று மீண்டும் பரவி வருவதை அடுத்து, கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. பலர் இதனால் வருத்தம் அடைந்திருப்பார்கள் என்பதை அறிவேன்.
"ஆனால், இது தேவை என்பதைப் புரிந்துகொண்டதற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"அனைவரது பாதுகாப்பிற்காகவும் நாம் நம் பங்கை ஆற்றிவரும் வேளையில் சமூகத்தினர் அமைதியும் பொறுமையும் காக்க வேண்டுகிறேன்," என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு நிலைமை மேம்பட்டுள்ளது என்ற திரு மசகோஸ், பள்ளிவாசல் அதிகாரிகள், தொண்டூழியர்கள், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோருக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

