ஏப்ரல் மாதம் முழுவதும் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவுடன் சிங்கப்பூரில் உள்ள தமிழ் அமைப்புகளும் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தின.
இறுதியாக வழக்கம்போல் கவிமாலை அமைப்பு தமிழ்மொழி மாத நிறைவு விழாவை இம்மாதம் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு 'ஸூம்' வழி நடத்தியது. விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கே. கார்த்திகேயன் கலந்துகொண்டு பரிசுகளையும் விருதுகளையும் வழங்கினார்.
வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் சு. மனோகரன் தமது நிறைவுரையில், "இதைப்போல் மாணவர்களின் செயல்பாடுகள் இருந்தால் வளர்தமிழ் இயக்கம் தமிழ்மொழி விழாக்களை நடத்தவேண்டிய அவசியமே இருக்காது," என்று வலியுறுத்தினார்.
மகாகவி பாரதியாரின் எள்ளுப் பேரனும் திரைப்படப் பாடலாசிரியருமான கவிஞர் நிரஞ்சன் பாரதி கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
திரு எம்.ஏ.முஸ்தபா ஆண்டுதோறும் வழங்கும் கணையாழி விருது, எழுத்தாளரும் மூத்த தமிழாசிரியருமான பொன் சுந்தரராசுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு அப்துல் ஜலீல் பொன்னாடை போர்த்த, சிறப்பு விருந்தினர் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மாலை அணிவித்து சான்றிதழ் வழங்க, முஸ்தபா கணையாழி பூட்டி சிறப்பு செய்தார்.
தொழிலதிபர் ஜி.வி.இராம் வழங்கும் இளங்கவிஞர் தங்கமுத்திரை விருதை கவிமாலைக் கவிஞர் அஷ்ரப் பெற்றுக்கொண்டார். விழாவினை மாணவர்கள் இரகுநாதனும் தமிழ்மதியும் நெறிப்படுத்தினர்.

