கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் ஒரே வழியாக சமூக நோய்த் தடுப்பாற்றலை சிங்கப்பூர் சார்ந்திருக்க முடியாது என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
கிருமிக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி நமக்குக் கிடைத்த பொருத்தமான ஆயுதமாக இருக்கிறது என்று அவர் கூறினார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி சிங்கப்பூரர்களுக்குத் தொடர்ந்து நாம் ஊக்கமூட்டி வருகிறோம் என்று கூறிய அமைச்சர், சமூக நோய் தடுப்பாற்றலைச் சார்ந்திருக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானது என்றார் அவர்.
பல மருத்துவப் பிரச்சினைகளால் சிலருக்குத் தடுப்பூசி போட முடியாது. தடுப்பூசியால் கடுமையான பாதிப்புகள் ஏற்படாமல் இருக்குமே ஒழிய, கிருமி பரவுவதை முற்றிலும் தடுக்கும் ஆற்றல் தடுப்பூசியிடம் இல்லை என்றார் அவர்.
தடுப்பூசி செயல்திட்டம் இதுவரை நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது என்றும் இது அமைச்சுக்கு ஊக்கமூட்டுவதாக இருக்கிறது என்றும் கூறிய அவர், இருந்தாலும் 70 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ளவர்களைப் பற்றி அமைச்சு அதிகம் அக்கறை கொண்டுள்ளதாகக் கூறினார்.
சமூக அளவில் கிருமி தொற்றாத அளவிற்குத் தடுப்பு ஆற்றலை ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி செயல்திட்டத்தைக் கட்டாயமானதாக ஆக்க திட்டம் உண்டா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அமைச்சர், எல்லாருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிட்டால் அதுவே போதும், நமக்கு பாதுகாப்பு ஏற்பட்டுவிடும். கொவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கை எல்லாம் தேவையில்லை என்ற சிந்தனை கூடாது என்று வலியுறுத்தினார்.
கிருமித்தொற்றையும் பாதிப்புகளையும் தடுத்துக் கொள்வதில் தடுப்பூசி ஒரு முயற்சிதான். சமூகப் பாதுகாப்பு இடைவெளி போன்றவை தொடர்ந்து முக்கியமானவையாக இருக்கும் என்றார் அவர்.
சுகாதார அமைச்சின் சுகாதாரத் துறை தலைமை அறிவியல் வல்லுநரான பேராசிரியர் டான் சோர் சுவான், சிங்கப்பூர் மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசியைப் போட்டுவிட்டால் சமூகத்தில் கொவிட்-19 பரவ முடியாத அளவுக்கு அரண் ஏற்பட்டுவிடும் என்று சென்ற ஆண்டு கூறியிருந்தார்.
இருந்தாலும் தடுப்பூசி மூலம் எந்த அளவுக்குக் கிருமிப் பரவலைத் தடுக்க முடியும் என்பது இனிமேல்தான் ஆய்வுகளின் மூலம் தெரியவர வேண்டும் என்று நேற்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி காரணமாக கிருமிப் பரவல் குறைகிறது. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுக்குத் தடுப்பூசி உதவுகிறது என்றார் அவர்.
கூடுமானவரை பொருளியலை வழக்கநிலைக்குக் கொண்டு வர உதவும் ஓர் உத்தியாகவும் தடுப்பூசி இருக்கிறது என்று அமைச்சர் கூறினார்.

