கொங் ஹுவா பள்ளி, செயின்ட் ஸ்டீஃபன்ஸ் பள்ளி இரண்டிலும் தலா இரண்டு மாணவர்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் அந்த இரண்டு பள்ளிகளும் வீட்டில் இருந்தபடி கற்கும் முறைக்கு மாறியுள்ளன.
தொற்றுக்கு ஆளான மாணவர்கள் கொவிட் தொற்றிய வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக இரண்டு பள்ளிகளிலும் ஒட்டப்பட்டிருந்த அறிக்கைகள் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
அந்த மாணவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த பள்ளி ஊழியர்கள், மாணவர்கள் அனைவரும் விடுப்பில் அல்லது இல்லத் தனிமை உத்தரவின் கீழ் இருப்பார்கள்.
இரண்டு பள்ளிகளும் நேற்று இணையம் வழியான வகுப்புகளுக்கு மாறிய அதே வேளையில் பள்ளி வளாகங்கள் முழுமையாக சுத்தம் செய்யயப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அந்த இரண்டு பள்ளிகளின் மாணவர்களைத் தவிர, இயோ சூ காங் தொடக்கப்பள்ளியின் ஒரு மாணவருக்கும் கொவிட்-19 கிருமி தொற்றியுள்ளது. அது குறித்து சுகாதார அமைச்சு கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.
இச்சம்பவங்கள் அனைத்தையும் சேர்த்தால், அண்மையில் கூடிய கொவிட்-19 தொற்றுகளால் கடந்த இரண்டு வாரங்களில் குறைந்தது ஐந்து பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எட்ஜ்ஃபீல்ட் உயர்நிலைப் பள்ளியும் விக்டோரியா தொடக்கக் கல்லூரியும் மற்ற இரண்டு பள்ளிகள் ஆகும்.
இதற்கிடையே விக்டோரியா தொடக்கக் கல்லூரியின் மாணவர்கள், ஊழியர்கள், குத்தகைக்காரர்கள் சுமார் 2,200 பேருக்கு கொவிட் -19 தொற்று ஏதும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
கல்வி அமைச்சு கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அதனைத் தெரிவித்தது.
தொடக்கக் கல்லூரி மாணவிக்கு கொவிட் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து பள்ளியுடன் தொடர்புள்ளவர்கள் அனைவருக்கும் கிருமித்தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டன.
மாணவியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட 95 மாணவர்களுக்கும் எட்டு ஊழியர்களுக்கும் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் விக்டோரியா தொடக்கக் கல்லூரியில் நேரடிப் பாடங்கள் வரும் திங்கட்கிழமை மீண்டும் தொடங்கும் என கல்வி அமைச்சு கூறியது.