குறைந்த வருமான ஊழியர்களின் சம்பளம் தொடர்பான பிற்சேர்க்கை ஒன்றையும் தேசிய சம்பளம் மன்றம் தமது வழிகாட்டிக் குறிப்புகளில் இணைத்துள்ளது.
கொவிட்-19 சூழலால் வர்த்தகச் சரிவைச் சந்திக்கும் முதலாளிகள், குறைந்த வருமான ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பதற்குப் பதில் அவர்களின் சம்பள உயர்வை நிறுத்தி வைக்கலாம் என்பது மன்றதில் புதிய பரிந்துரை.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் அத்தகைய ஊழியர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என வழிகாட்டிக் குறிப்புகளின் பிற்சேர்க்கை தெரிவிக்கிறது.
கொள்ளைநோய் தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கலாம் என்பதும் அதன் பரிந்துரைகளில் அடங்கும்.
இந்தப் பரிந்துரைகளை குைறந்த வருமான ஊழியர்களுக்கான முத்தரப்பு ஊழியர்குழுவின் பரிந்துரைகளோடு இணைக்க மனறம் எண்ணுகிறது.
குழுவின் பரிந்துரைகள் இவ்வாண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட உள்ளன.
புதிய பரிந்துரைகள் குறித்து சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
குறைந்த வருமான ஊழியர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தக் கோரும் பரிந்துரை, பொருளியல் மீட்சி மற்றும் வளர்ச்சியின் மூலம் கிடைக்கும் பலன்களை அவர்களுக்கு உறுதிப்படுத்தக்கூடியதாக உள்ளது என அந்த அறிக்கை குறிப்பிட்டது.
ஒருவேளை தங்களது முதலாளிகள் இன்னும் நல்ல நிலைக்கு வராத நிலையில் அவர்கள் மீதான பொருளியல் தாக்கத்தைக் குறைக்க பரிந்துரைகள் உதவும் என்றும் அது தெரிவித்துள்ளது.
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைவர் மேரி லியூ கூறுகையில் முதலாளிகள் தங்களது ஊழியர்களுக்கு வருடாந்திர சம்பள உதவித் தொகையை வழங்குவதன் மூலம் திறனாளர்களைத் தக்க வைத்துக்கொள்வதோடு மீட்சியை நோக்கி நிறுவனத்தை நல்ல முறையில் கொண்டு செல்லலாம் என்றார்.

