முன்னாள் துணைப் பிரதமர் கோ கெங் சுவீ பெயரில் தொடங்கப்பட்டு உள்ள அறநிறுவனம் சிங்கப்பூரின் நான்கு சமூகங்களைச் சேர்ந்த வசதிகுறைந்த மாணவர்
களின் முன்னேற்றத்திற்காக $1.85 மில்லியன் தொகையை நன்கொடையாக வழங்கி உள்ளது.
திரு கோவின் 11வது மறைவுதினத்தை ஒட்டி வழங்கப்படும் அந்த நன்கொடை, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வி பயிலும் வசதிகுறைந்த மாணவர்களுக்கும் பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
'கோ கெங் சுவீ அறநிறுவனம்' திரு கோவின் நற்பண்புகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2008ஆம் ஆண்டு அவரது மனைவி டாக்டர் ஃபுவா சுவீ லியனால் தொடங்கப்பட்டது.
"வசதி குறைந்தோரும் தேவை உள்ளோரும் சமூகத்தில் உள்ளனர். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்பதே எனது கணவரின் கனவாக இருந்தது.
"இதுபோன்ற மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் காண கல்வி ஒன்றே வழி என்பதை அவர் தமது பதவிக்காலம் முழுவதும் உறுதிபட சொல்லி வந்தார்," என்று டாக்டர் ஃபுவா கூறினார்.
சிங்கப்பூரின் அமைச்சரவையில் நிதி, தற்காப்பு, கல்வி போன்ற துறைகளை வகித்ததோடு துணைப் பிரதமராகவும் பொறுப்பு வகித்த திரு கோ, நாட்டில் எதிர்பாராத பொருளியல் நெருக்கடி ஏற்படும்போது நிதி கையிருப்பைப் பாதுகாக்கும் திட்டங்களோடு அரசாங்க முதலீட்டு நிறுவனத்தை 1981ஆம் ஆண்டு தொடங்கினார்.

