உணவு, பான வியாபாரத்திற்கு மாறிய இரவு விடுதிக்கூடங்கள் நேற்றுக் காலை அறிவிக்கப்பட்ட புதிய கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறை விதிகளை மீறினால் அவர்கள் தங்களது விடுதி உரிமத்தை இழக்கும் நிலை நேரிடும்.
இரவுநேர வியாபாரங்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் வரை அவர்கள் தங்களது தொழிலைக் கைவிட வேண்டி வரும் என்றும் புதிய உணவு உரிமத்திற்காக அவர்கள் மறுபடியும் விண்ணப்பம் செய்ய வேண்டியதிருக்கும் என்றும் நீடித்த நிலைத்தன்மை மற்று சுற்றுப்புற அமைச்சு நேற்று தனது அறிக்கையில் தெரிவித்தது.
விதிமீறலுக்காக பத்து உணவு. பானக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூடல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கடைகளில் ஏழு இதற்கு முன்னர் இரவுநேரக் கூடங்களாகச் செயல்பட்டவை.
பெரிய குழுக்கள் ஒன்றுசேருவதைத் தடுக்கத் தவறியது, நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தியது போன்ற குற்றங்களுக்காக அந்தக் கடைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

