புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள் நாளை (மே 16ஆம் தேதி) நடப்புக்கு வரவுள்ளன. அன்றாட வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது? தமிழ் முரசு விளக்குகிறது.
1. எத்தனை பேர் ஒன்றாக வெளியில் செல்லலாம்?
நாளை முதல் ஜுன் 13ம் தேதி வரை, இரண்டு பேர் மட்டுமே ஒன்றாக செல்ல முடியும்.
2. உறவினர் வீட்டுக்கு செல்ல முடியுமா?
வீடுகளுக்கு ஒரு நாளில் இரண்டு விருந்தினர்கள் வரை மட்டுமே செல்ல முடியும்.
3. தாத்தா பாட்டி வீட்டில் பேரப்பிள்ளைகளை விட முடியுமா?
தாத்தா பாட்டிமார் தங்கள் வீட்டில் பேரப்பிள்ளைகளைத் தொடர்ந்து பராமரிக்க முடியும். பேரப்பிள்ளைகள் இரண்டு விருந்தினர்கள் கணக்கில் சேர்க்கப்பட மாட்டார்கள்.
4. உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாமா?
முடியாது. நாளை முதல் உணவங்காடிக் கடைகளிலும் உணவகங்களிலும் உள்ளேயும் வெளியேயும் அமர்ந்து சாப்பிட முடியாது. உணவுப் பொட்டலங்களை வாங்கிச் செல்ல மட்டும் முடியும்.
5. அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்க்கலாமா?
அடிப்படையாக, அனைவரும் வீட்டிலிருந்துதான் வேலை பார்க்க வேண்டும். ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்தபடி வேலை செய்யும் அவசியம் இருந்தால், அவர்களின் வேலை நேரம் வெவ்வேறு நேரங்களில் தொடங்கவேண்டும். வேலை நேரம் நீக்குப்போக்காக இருக்க வேண்டும். அத்துடன் வேலையிடத்தில் சக ஊழியர்களுடன் ஒன்றுகூடல் நடத்தவோ ஒன்றாக சாப்பிடவோ முடியாது.
6. பொதுபோக்குவரத்து பாதுகாப்பானதா?
பொதுப்போக்குவரத்து நிறுவனங்களும் பயணிகளும் முன்னெச்செரிக்கையுடன் நடந்தால் பொதுப் போக்குவரத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். எடுத்துக்காட்டாக எம்ஆர்டி ரயில்களில் 6 நிமிடத்துக்கு ஒரு முறை புதிய காற்று செலுத்தப்படுகிறது.
7. முகப்பராமரிப்பு சேவைகள் இருக்குமா?
முகப்பராமரிப்பு உட்பட, முகக்கவசங்களைக் கழற்றி வைக்க வேண்டிய எல்லாச் சேவைகளும் இயங்க மாட்டா.
8. அப்படி என்றால் பல்மருத்துவச் சேவைகளும் இயங்காதா?
அவை விதிவிலக்கு. மருத்துவரைப் பார்க்கும்போது முகக் கவசங்களைக் கழற்றத் தேவையிருக்கும். ஆனாலும், பல்மருத்துவச் சேவைகளும் மருத்துவச் சேவைகளும் தொடரும்.
9. கடைத்தொகுதிகள், திரையரங்குளுக்குச் செல்ல முடியுமா?
செல்ல முடியும். ஆனால் சமூக இடைவெளியைக் காக்க, இவற்றில் உள்நுழையும் ஆட்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, கடைத்தொகுதிகளில் பத்து சதுர மீட்டருக்கு ஒருவர் எனும் இடைவெளி காக்கப்பட்டது. நாளை முதல் ஒரு ஆளுக்கு 16 சதுர மீட்டர் இடைவெளி நடப்புக்கு வந்துள்ளது. திரையரங்குகளிலும் கூட்டம் குறைக்கப்படும். அத்துடன் உணவு பானத்துக்கு அனுமதி இல்லை.
10. கடைகள் திறந்திருக்குமா? மளிகைப் பொருள் வாங்குவதில் பிரச்சினை இருக்குமா?
பேரங்காடிகள் உள்ளிட்ட அனைத்து சில்லறை வர்த்தகக் கடைகளும் தொடர்ந்து செயல்படும். சிங்கப்பூரில் போதுமான அளவு இருப்பு உள்ளது என்று அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.
11. வழிபாட்டுத் தலங்கள் திறந்திருக்குமா?
முன்கூட்டியே கிருமிப் பரிசோதனையை நடத்தாவிட்டால், ஒரே நேரத்தில் 50 பேர் வழிபாட்டுத் தலத்தில் அனுமதிக்கப்படுவார்கள். கிருமி சோதனைகள் செய்யப்பட்டால், 100 பேர் கூடலாம். ஆனால் பாடல்களுக்கும் குழல், நாதஸ்வரம், டிரம்பெட் போன்ற காற்றிசைக் கருவிகளுக்கும் அனுமதி இல்லை.
12. திருமணங்களை நடத்தலாமா?
திருமணப் பதிவுகளுக்கு அனுமதி உண்டு. திருமண விருந்துகளுக்கு அனுமதி இல்லை. வழிபாட்டுத் தலங்களுக்கான அனுமதி திருமண நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும்.

