கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிப்பட்டுள்ள சிறைக் கைதியுடன் ஒரே சிறை அறையில் இருந்த நால்வருக்குக் கிருமித்தொற்று ஏற்படவில்லை என்று சிங்கப்பூர் சிறைச் சேவைத் துறை உறுதி செய்துள்ளது.
அந்த நான்கு பேருக்கும் மீண்டும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 வயது சிறைக் கைதிக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பது தெரிந்தவுடன் இந்த நால்வரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்கிடையே, சாங்கி சிறைச்சாலையில் குறிப்பிட்ட ஓர் இடத்துக்குச் சென்ற சிறைக் கைதிகள், சிறைச்சாலை ஊழியர்கள், பங்காளித்துவ ஆதரவாளர்கள் என 1,050 பேருக்கு கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் 900 பேர் சிறைக் கைதிகள். இம்மாதம் 10ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை சிறையில் உள்ள நிலையம் ஏ5க்குச் சென்ற அனைவருக்கும் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதுவரை மற்ற சிறைக் கைதி யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலையம் ஏ5ல் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
குடும்பத்தினர் சந்திப்பு, ஆலோசனைக் கூட்டங்கள், மறுவாழ்வுத் திட்டங்கள், அவசரநிலை அல்லாத மருத்துவச் சேவைகள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
பாதிக்கப்பட்ட இடங்கள் அனைத்தையும் கிருமி நாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்துவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.
கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டும் அறிகுறி இல்லாதவர்களை அடையாளம் காண அடுத்த சில நாட்களில் மருத்துப் பரிசோதனை முடுக்கிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சிறைக் கைதிகள், ஊழியர்கள், பங்காளித்துவ ஆதரவாளர்கள் என ஏறத்தாழ 5,000 பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும்.
பாதிக்கப்பட்ட சிறைக் கைதி சாங்கி சிறைச்சாலையில் உள்ள நிலையம் ஏ5ல் இருக்கும் சமையலறையில் வேலை செய்ததாக தெரிவிக்கப்பட்டது. அங்கு 'சேட்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த உணவுப் பிரிவு ஊழியருடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
இம்மாதம் 13ஆம் தேதியன்று அந்த ஊழியருக்குக் கிருமித்தொற்று இருப்பது தெரியவந்தது.
சிறைக் கைதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதும் அவர் சிலாராங் பார்க் வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவரது உடல்நிலையை மருத்துவ அதிகாரிகள் கண்
காணித்து வருகின்றனர்.
அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவரிடம் கொவிட்-19 அறிகுறிகள் தென்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

