வலைப்பதிவாளர் லியோங் ஸி ஹியான், பிரதமர் லீ சியன் லூங்கிற்கு $262,327.22 இழப்பீடு கொடுத்து இருக்கிறார். அந்தத் தொகையை அவர் பலரிடத்திலும் இருந்து திரட்டி தந்து இருக்கிறார்.
அந்த வலைப்பதிவாளர் இழப்பீடாக $133,000 தரவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. செலவு தொகையாக $129,327.22 தரவேண்டும் என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.
மலேசியாவில் இடம்பெற்ற 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் பிரதமர் லீ சியன் லூங்கை தவறாக ஈடுபடுத்தி செய்தி வெளியிட்டு இருந்த ‘தி கவரேஜ்’ என்ற மலேசிய செய்தித் தளத்தில் இடம்பெற்றிருந்த ஒரு கட்டுரையை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த வலைப்பதிவாளர் பகிர்ந்தார்.
அதற்காக அவருக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டது. தீர்ப்பு வெளியானதை அடுத்து இணையம் மூலம் பணம் திரட்ட அந்த வலைப்பதிவாளர் ஒரு முயற்சியைத் தொடங்கினார்.
தேவையான முழு தொகையையும் சென்ற சனிக்கிழமை வாக்கில் லியோங் திரட்டிவிட்டதாகவும் அந்தத் தொகைக்கான காசோலை பிரதமர் லீயின் வழக்கறிஞர்களிடம் இன்று பிற்பகல் ஒப்படைக்கப்பட்ட தாகவும் அவருடைய வழக்கறிஞரான திரு லிம் தியென் கூறினார்.
பிரதமர் லீயை அவதூறு செய்ததற்காக வழக்குத் தொடுக்கப்பட்ட ராய் நெர்க் என்ற மற்றொரு வலைப் பதிவாளர் தான் இழப்பீடாகச் செலுத்த வேண்டிய $150,000 தொகையில் $144,000 தொகையை இணையம் மூலம் திரட்டி இருப்பதாக இந்த மாத தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.