உயர் வடிகட்டுதல் திறன் கொண்ட முகக்கவசங்களை அணியுமாறும், இந்த "முக்கியமான காலகட்டத்தில்" கொவிட்-19 பரவலைக் குறைக்க வீட்டிலேயே இருக்குமாறும் சிங்கப்பூர் மக்களை நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக மக்கள் அருகில் இருக்கக்கூடிய மூடப்பட்ட இடங் களுக்குச் செல்லும்போது அதிக வடிகட்டுதல் திறன் கொண்ட முகக்கவசம் அவசியம். மருத்துவ முகக்கவசம் அல்லது வடிகட்டி இணைக்கப்பட்டது போன்றவை அதிக வடிகட்டுதல் திறன் கொண்டவை. வெறுமனே துணியினால் ஆன முகக்கவசத்திற்கு இத்தகைய திறன் இல்லை என்றார் அவர்.
பல்வேறு உருமாற்ற கொவிட்-19 கிருமிகள் எவ்வாறு பரவக்கூடியவை, அவை காற்றுத்துகள் மூலம் எவ்வாறு பரவுகின்றன என்பதை அண்மைய சான்றுகள் காட்டுவதால் தகுந்த முகக்கவசத்தைப் பயன்படுத்துவது முக்கியம் என்றார் திரு வோங்.
கொவிட்-19 பரவலைக் கையாளும் அமைச்சுநிலை பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு வோங், நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தகுந்த முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கினார்.
முகக்கவசப் பயன்பாடு குறித்த வழிகாட்டலை சுகாதார அமைச்சு நேற்று புதுப்பித்துள்ளது.
பொதுமக்கள் அனைவரும் உயர் வடிகட்டுதல் திறன் கொண்ட முகக்கவசங்களைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
இதில் குறைந்தது இரண்டு அடுக்குத் துணியால் ஆன மறுபயன்பாட்டு முகக்கவசம், மருத்துவ முகக்கவசம் ஆகியவை அடங்கும்.
மக்கள் கழகமும் தெமாசெக் அறநிறுவனமும் வழங்கிய முகக்கவசங்களைப் போன்ற மறுபயன்பாட்டு முகக்கவசங்கள் உயர் வடிகட்டுதல் திறனைக் கொண்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இது நம் அனை வருக்கும் மிகவும் முக்கியமான காலகட்டம். புதிய உருமாற்றக் கிருமிகள் கடந்த ஆண்டு எதிர்கொண்டதை விட அதிகம் தொற்றக்கூடியவை என்பதை அறிவோம்.
பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை தேவை
"புதிய கிருமிகள் காற்றுத்துகள்களில் பரவக்கூடும் என்பதற்கான அதிகரித்து வரும் சான்றுகள் உள்ளன. எனவே, நாம் மேற்கொள்ளும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கிருமி பரவாமல் பாதுகாக்க போதுமானவையாக இருக்காது. இன்னும் கடுமையான நடவடிக்கைகள் தேவை.
"எனவேதான் அண்மையில் உணவுக் கடைகளில் உணவருந்த தடை, மாணவர்கள் வீட்டிலிருந்து கற்க ஏற்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டியிருந்தது," என்றார் அமைச்சர் வோங்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு மாத காலத்துக்கு இருவருக்கு மேல் ஒன்றாகக் கூடத் தடை உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளின் பயனை அறிய ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை ஆகும் என்று திரு வோங் கூறினார்.
சமூகத்தில் கொவிட்-19 சம்பவங்கள் அண்மைய வாரங்களில் அதிகரித்து வருகின்றன, மேலும் தொற்றுக் குழுமங்கள் பல உருவாகியுள்ளன.
அண்மைய கட்டுப்பாடுகள் தொற்று எண்ணிக்கையைக் குறைக்கும் எனத் தாம் நம்புவதாகக் கூறினார் திரு வோங்.
அரசாங்கம் தொடர்ந்து நிலைமையை மிகவும் கவனமாக ஆராய்ந்து வரும். தேவை ஏற்பட்டால் மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பொதுச் சுகாதார நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கும் என்று அமைச்சர் கூறினார்.
கிடைக்கும்போது தடுப்பூசி போட்டுக்கொள்வது, முடிந்த வரையில் வீட்டிலேயே இருப்பது, சிறந்த பாதுகாப்பைத் தரும் முகக்கவசங்களை அணிவது போன்ற நடவடிக்கைகள் மூலம் கிருமிப் பரவலைத் தடுப்பதில் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்றார் அவர்.
முகக்கவசம் போதிய இருப்பு உள்ளது
சரியான முகக்கவசத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டி வெளியிடப்படவுள்ளது.
சரியான முகக்கவசத்தைப் பயன்படுத்துவதன் நன்மைகளை மக்கள் தெரிந்துகொள்ளவும், மக்களை ஊக்குவிக்கவும் இந்த வழிகாட்டி உதவும்.
அதே நேரத்தில், தரம் வாய்ந்த முகக்கவசங்கள் விற்கப்படுவதை உறுதிப்படுத்த அரசாங்கம் விற் பனையாளர்களுடன் இணைந்து செயல்படும்.
முகக்கவச உற்பத்தி சிங்கப்பூரில் உள்ளது என்று வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் உறுதி அளித்தார். சில உள்ளூர் நிறுவனங்கள் ஏற்கனவே மருத்துவ முகக்கவசங்களை உற்பத்தி செய்கின்றன. இறக்குமதியும் அதிகரிக்கும். போதுமான இருப்பும் உள்ளது. எனவே, பதற்றமடைந்து முகக்கவசம் வாங்க விரையத் தேவையில்லை என்றார் அவர்.

