உள்சிகிச்சை பெறும் நோயாளிகளை நேற்று மீண்டும் கட்டம் கட்டமாக ஏற்றுக்கொள்ள தொடங்கிய டான் டோக் செங் மருத்துவமனை, அதன் பாதுகாப்பை வலுப் படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.
மருத்துவமனையின் 12,000 ஊழியர்களுக்கும் அங்கு தற்போது தங்கி சிகிச்சை பெற்று வருபவர் களுக்கும் கடந்த இரு வாரங்களில் ஆறு முறை கொவிட்-19 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று அதனைத் தெரிவித்தது.
சுமார் 2 வாரங்களுக்கு முன்னர் கொவிட்-19 அங்கு பரவத் தொடங்கியதால், மருத்துவமனை புதிய உள்சிகிச்சைக்காக புதிதாக வருபவர்களையும் வெளிநோயாளி சிகிச்சை பெறுபவர்களையும் அனு மதிக்கப் போவதில்லை என்று அறிவித்தது.
உள்சிகிச்சை பெற வருவோர் இனி அனுமதிக்கப்படுவார்கள் என்று டான் டோக் செங் மருத்துவமனை கடந்த திங்கட்கிழமை அறிவித்தது.
கடைசியாக இரண்டு வாரங் களுக்கு முன்னர் அதன் வார்டுகளில் கொவிட்-19 தொற்றியதாகவும் அங்கு தொற்றுக்கு ஆளானவர்கள் அனைவரும் தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் அல்லது தனிமையில் உள்ளதாகவும் மருத்துவமனை கூறியது.
பாதுகாப்பு வலுப்பெற்ற போதும் தனது முன்னணி மருத்துவப் பராமரிப்பு ஊழியர்கள் நிதர்சனமான, உடனடி ஆபத்துகளை எதிர்நோக்கு வதாகவும் மருத்துவமனை அதன் ஃபேஸ்புக் பதிவில் கூறியது.
தீவிரப் பரிசோதனைகள், கண்காணிப்பு ஆகியவற்றை மேற்கொண்டாலும் ஆபத்துகளைக் குறைக்க மட்டும் முடியுமே தவிர அகற்ற முடியாது என்றது அது.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு, ஒரு நோயாளியை முன்கூட்டியே பதிந்துகொண்ட ஒரு வருகையாளர் நாளுக்கு ஒரு முறை சென்று பார்க்க முடியும். அதிகபட்சம் அவர்கள் அங்கு 30 நிமிடம் இருக்கலாம்.
தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களை வருகையாளர்கள் பார்க்க அனுமதி உண்டு. அத்துடன் அவசர சிகிச்சைப் பிரிவும் இனி இயங்கும்.
மருத்துவமனை வளாகத்தில் நேற்று தாதிகள் தனிப்பட்ட பாதுகாப்புக் கவச ஆடைகளை அணிந்து காணப்பட்டனர்.
டான் டோக் செங் மருத்துவ மனையுடன் தொடர்புடைய 46 பேருக்கு இதுவரை கொவிட்-19 தொற்று கண்டுள்ளது.