விநியோக ஊழியர்கள், அரசாங்க ஆய்வாளர்கள், கட்டுமான, ஆலோசனை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட கட்டுமானத் தளங்களுக்கு வருகைபுரியும் அனைவரும் அவ்விடங்களில் நுழையும் முன் கட்டாயம் கொவிட்-19 பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்துள்ளது.
அவ்விடங்களுக்குச் செல்வதற்கு 14 நாள்களுக்குமுன் குறைந்தது ஒருமுறையேனும் அவர்கள் எச்சில்/சளி மாதிரி பரிசோதனை செய்துகொண்டு, 'தொற்று இல்லை' என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னும் கிருமி தொற்றியுள்ளதா என உடனடியாகக் கண்டுபிடிக்க ஏதுவாக, தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, 14 அல்லது 28 நாள்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்துகொண்டால் போதும் என்ற சலுகை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.
அதாவது, தடுப்பூசி போட்டிருந்தாலும் போடாவிடினும், விடுதியில் தங்கியுள்ளாரா என்பது போன்ற அபாய நிலையின் அடிப்படையில், அனைவரும் ஏழு அல்லது 14 நாள்களுக்கு ஒருமுறை கட்டாயம் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக ஆணையம் தெரிவித்தது. கட்டுமானத் தளங்களில் வேலை செய்யும் அல்லது வருகைபுரியும் பட்சத்தில், சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், வேலை அனுமதி அட்டை உடையோர் அனைவருக்கும் இந்த எச்சில்/சளி மாதிரி பரிசோதனை விதிமுறை பொருந்தும்.
அட்டவணைப்படி வழக்கமான பரிசோதனை செய்துகொள்ளத் தவறும் ஊழியர்களைப் பணியில் ஈடுபடுத்த முடியாது என்றும் அவர்கள் மீதும் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

