அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு கசந்தால் அவற்றுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் பின்னடைவாக அமையும் என்று இணையம் மூலம் நடைபெற்ற அமெரிக்க வர்த்தக சபையின் உலகளாவியப் பொருளியல் மீட்சி கருத்தரங்கில் பிரதமர் லீ சியன் லூங் கலந்துகொண்டு தெரிவித்தார்.
"பெருமளவிலான பொருளியல், தொழில்நுட்பப் பலம், ஆயுதங்கள், அணுவாயுதம் ஆகியவற்றைக் கொண்ட நாடுகளாக அமெரிக்காவும் சீனாவும் திகழ்கின்றன. நவீனமயமான ஆயுதப் படையை சீனா கொண்டுள்ளது. அமெரிக்காவின் ஆயுதப் படை உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்தது.
"ஆனால் என்னதான் சக்திவாய்ந்த படைகளாக இருந்தாலும் போருக்குச் செல்லும்போது பெருத்த சேதம் ஏற்படுவது நிச்சயம்.
"எனவே ஒன்றிணைந்து செயல்படவும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளவும் இருநாடுகளும் முடிவெடுப்பது அவசியம். அமெரிக்கா-சீனா ஒத்துழைப்புக்குப் பல வாய்ப்புகள் உள்ளன," என்று திரு லீ கூறினார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது அதில் ஒன்று என்று பிரதமர் லீ தெரிவித்தார். அது
மட்டுமல்லாது, பொது சுகாதாரம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கிருமித்தொற்றுகள் ஆகியவை தொடர்பாகவும் இருநாடுகளும் இணைந்து செயல்படலாம் என்றார் அவர்.
பணக்கார நாடாகிவிட்டதாக சீனா உணர்வதாகவும் சக்திவாய்ந்த நாடு என்ற அங்கீகாரம் வேண்டும் என அது விரும்பவதாகவும் திரு லீ கூறினார்.
"ஆனால் வேறு சக்திவாய்ந்த நாடுகளும் இருப்பதை உணர வேண்டும். சக்திவாய்ந்த நாடு என்று நீண்டகாலத்துக்கு மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நிலையை அமெரிக்கா சிறப்பாக தக்கவைத்துள்ளது. அமெரிக்காவுக்கு உலகிலேயே சக்திவாய்ந்த கடற்படை, விமானப் படை, ராணுவம் ஆகியவை உள்ளன. அதுமட்டுமல்லாது, அமெரிக்காவுக்கு உலகெங்கும் பல நட்பு நாடுகள் இருக்கின்றன. பயம் காரணமாக அமெரிக்காவுடன் அவை ஒத்துழைக்கவில்லை. மாறாக, தங்களுக்கும் வாய்ப்புகள் இருப்பதை இந்த நாடுகள் உணர்கின்றன.
"பிற நாடுகளுக்கும் வாய்ப்புகளை வழங்குவதால் உலகத்துக்கு அமெரிக்கா நன்மை செய்கிறது," என்றார் திரு லீ.
அமெரிக்காவின் இந்த மனப்போக்கு சீனாவுக்கு உடனே வராது என்றும் அதற்கு நாள் எடுக்கும் என்றும் பிரதமர் லீ தெரிவித்தார்.இதற்கிடையே, சீனாவின் வளர்ச்சியை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
"இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்படாமல் மோதிக்கொண்டாலும் யாரும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. சீனா சோவியத் யூனியனைப் போல அழிந்துவிடாது. முன்னோக்கிச் செல்ல அது துடிப்புடன் செயல்படுகிறது. அதே சமயத்தில் அமெரிக்காவும் எந்த வகையிலும் குறைந்ததல்ல. அதுவும் தொடர்ந்து வலிமையுடன் இருக்கிறது. எனவே ஒன்றிணைந்து செயல்படுவது இருநாடுகளின் பொறுப்பாகும்," என்று பிரதமர் லீ வலியுறுத்தினார்.
இது ஒருபுறம் இருக்க பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பெரிய நாடுகளும் சிறிய நாடுகளும் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும் என்று திரு லீ உலக நாடு
களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஐநாவின் 26வது பருவநிலை மாற்றம் மாநாடு இவ்வாண்டு பிரிட்டனில் நடைபெறுவதை சுட்டிய திரு லீ, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மேலும் அதிகமான நாடுகள் பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும் எனக்
கேட்டுக்கொண்டார்.

