கொவிட்-19 பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை கடந்த வார இறுதியில் மீறியதற்காக இரண்டு உணவு, பானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இரண்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாசிர் பஞ்சாங்கில் உள்ள ஹூஹா ரெஸ்டாரன்ட் & கபே 30 நாள்களுக்கும், ஒன் நார்த்தில் இருக்கும் டார்ட்ஸ் லெஜெண்ட் 20 நாள்களுக்கும் மூடப்பட்டிருக்கும் என நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுப்புற அமைச்சின் நேற்றைய அறிக்கை குறிப்பிட்டது.
வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்காதது உட்பட பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை மீறியதற்காக நீ ஆன் சிட்டியில் இருக்கும் ஃபூட் வில்லேஜ், தி சுஷி பார் டைனிங் ஆகிய இரு கடைகளுக்கும் தலா $1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிப்புற பொது இடங்களில் கூட்டம் அதிகமானால் அவையும் தேசிய பூங்காக்கள் கழகத்தால் தற்காலிகமாக மூடப்படும் என அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
சில பூங்காக்கள், கடற்கரைகள், புல்வெளிகள் போன்றவற்றின் சில பகுதிகள், கார் நிறுத்துமிடங்கள் போன்ற வெளிப்புற இடங்கள் இவற்றுள் அடங்கும்.
கூட்டம் குறைவாக இருக்கும்போது அவை திறக்கப்படும்.
இம்மாதம் 14ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு மேல் வாடிக்கையாளர்கள் மது அருந்த அனுமதித்ததுடன் அட்டை விளையாட்டுகள் விளையாட வாடிக்கையாளர்களை அனுமதித்தது ஹூஹா. இது அந்தக் கடையின் இத்தகைய மூன்றாவது குற்றம்.
அதே நாளில் டார்ட்ஸ் லெஜெண்ட் தமது வாடிக்கையாளர்களை விளையாட அனுமதித்தது. இது இந்தக் கடையின் இத்தகைய இரண்டாவது குற்றம்.
உணவகங்களில் உணவருந்த அனுமதி அளிக்கப்படும்போது இந்தக் கடைகள் மூடப்படுவது நடப்புக்கு வரும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
இருவருக்கு மேல் குழுக்களாகக் கூடியதாக ஒன்பது பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பூங்காக்களில் உள்ள அனைத்து நீர் விளையாட்டு, பொழுதுபோக்கு வசதிகளும் ஜூன் மாதம் 13ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அமைச்சு தெரிவித்தது.

