வெளிநாட்டுத் தூதரகங்கள் சிங்கப்பூரின் உள்நாட்டு சமூக, அரசியல் விவகாரங்களில் தலையிடலாகாது என்று இங்குள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு நினைவூட்டியதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. பாலின வகைப்பாட்டை அரசாங்கக் கொள்கைகளில் எப்படி முறைப்படுத்துவது என்பதும் அதில் அடங்கும்.
தன்பாலின ஈர்ப்புள்ளவர்கள், இருபாலின ஈர்ப்புள்ளவர்கள், பாலினம் மாறியவர்கள் ஆகியோருடன் பணியாற்றும் 'ஓகச்சாகா' எனும் உள்ளூர் அமைப்புடன் இணைந்து அமெரிக்கத் தூதரகம் கடந்த திங்கட்கிழமை இணையக் கருத்தரங்கை நடத்தியது.
அந்த நிகழ்ச்சி நடைபெற்றதை வெளியுறவு அமைச்சு "வருத்தத்துடன் கவனிப்பதாக" அதன் பேச்சாளர் கூறினார். மேலும், பாலின நாட்டம் போன்ற விவகாரங்கள் சிங்கப்பூரர்கள் மட்டுமே விவாதித்து முடிவு செய்ய வேண்டிய தெரிவுகள் என்றார் பேச்சாளர்.
அழைப்பின் பேரில் மட்டும் கலந்துகொள்ளும் அந்த இணையக் கருத்தரங்கை அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற பொருளியல் துறை பேராசிரியரான லீ பேட்ஜட் நடத்தினார்.
வெவ்வேறு பாலின வகைப்பாடு உள்ளவர்களின் மீது காட்டப்படும் வெறுப்புணர்வுக்கு எதிரான அனைத்துலக நாளைக் குறிக்க அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சென்ற ஆண்டும் அந்நாளைக் குறிக்க சிங்கப்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் ஊகச்சாகா அமைப்பும் அத்தகைய கருத்தரங்கை நடத்தியிருந்ததன.

