மரணமடைந்த பதின்ம வயது பெண் ஒருவரைக் கடுமையாக காயப்படுத்தியதாகக் கூறப்படும் அவரது அண்ணன் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக்கூடும்.
19 வயது ஹுவாங் பாவ்யிங்கை கடுமையாகத் தாக்கிய ஒரு குற்றச்சாட்டைத் தற்போது எதிர்நோக்குகிறார் அவரது அண்ணன் ஹுவாங் பாவ்சான்.
பெண்ணின் உடல்கூறு பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்றும் அவரது மரணத்துக்கான காரணம் உறுதியானால், அவரது அண்ணன் இன்னும் கடுமையான குற்றச்சசாட்டை எதிர்நோக்கலாம் என்றும் நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், ஹுவாங் பாவ்சான் மீது தவறாக அடைத்துவைத்தல் உட்பட கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்று போலிஸ் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
29 வயது ஹுவாங் பாவ்சான்னும் இன்னும் இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை, கிளிமெண்டி வெஸ்ட் ஸ்ட்ரீட் ஒன்றில் மே 4ம் தேதி இரவு 11 அளவில் மரக்கம்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது.
அதன் தொடர்பில், சிங்கப்பூரரான லிம் பெங் தியோங், 62, சிங்கப்பூர் நிரந்தரவாசியான சீ மெய் வான், 41 இருவர் மீதும் கடுமையாகக் காயப்படுத்திய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட லிம், சீ இருவருக்கும் மாண்ட பெண்ணுக்குமான உறவு பற்றி தகவல் ஏதும் இல்லை.
மூவர் மீதான வழக்கு மீண்டும் வரும் 25ம் தேதி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.
வேண்டும் என்றே கடுமையாக காயப்படுத்திய குற்றத்துக்கு, குற்றம் புரிவோருக்கு பத்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது அனைத்துமே விதிக்கப்பட்டலாம்.
சீ ஒரு பெண் என்பதால் அவருக்கு பிரம்படித் தண்டனையை விதிக்க முடியாது.

