கொவிட்-19 பரவலுக்கு எதிரான புதிய கட்டுப்பாடுகள் தரும் "குறுகியகால வலியைத்" தாங்கிக்கொண்டு முதலாளிகளும் ஊழியர்களும் தியாகங்கள் செய்தால்தான் வர்த்தகங்களையும் வேலைகளையும் காப்பாற்ற முடியும் என்று சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் கூறியுள்ளது.
அண்மைய நடவடிக்கைகள் வர்த்தகங்களைப் பாதிக்கும் என்று சம்மேளனம் நேற்று விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டது. குறிப்பாக, சுற்றுலாக்கள், பொழுதுபோக்கு, கட்டுமானம், உணவு பானம், விருந்தோம்பல், கடல்துறை, சில்லறை வர்த்தகம், உற்பத்தி செய்முறை ஆகிய துறைகள் பாதிக்கப்படும் என்று அது கூறியது.
அண்மையக் கட்டுப்பாடுகள் அவசியமானவை என்பது முதலாளிகளுக்குப் புரியும். ஆனாலும், வர்த்தகங்களின் வருவாய் இவற்றால் குறையும். அதே வேளையில் செலவுகளில் மாற்றமிருக்காது. வர்த்தகச் செயல்பாடுகள் குறைவதால், தற்காலிகமாக தேவைக்கும் அதிகமான ஊழியர்கள் இருக்கும் நிலை ஏற்படலாம் என்று சம்மேளனம் கூறியது.
தேசிய சம்பள மன்றத்தின் வழிகாட்டிகளின்படி நடந்து, தேவைக்கும் அதிகமான ஊழியர்களையும் அவர்களுக்கான சம்பளச் செலவுகளையும் முதலாளிகள் பொறுப்புடன் சமாளிக்க வேண்டும் என்று சம்மேளனம் வர்த்தகங்களுக்கு அறிவுறுத்தியது.
கடந்த ஆண்டு அக்டோபரில் வழிகாட்டிகளை வெளியிட்ட தேசிய சம்பள மன்றம் கடந்த வாரம் அதில் திருத்தங்களைச் செய்தது.
கொவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டுவரும் அல்லது வளர்ச்சி அடையும் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளங்களை பழைய நிலைக்கு ஏற்றி, அவர்களுக்கு நியாயமான மாறுவிகித போனஸ் வழங்கி, புதியவர்களை வேலைக்கு சேர்க்க வேண்டும் என்று சம்பள மன்றம் கூறியிருந்தது.
செலவுகள் வெகு அதிகமாக இருக்கும் நிறுவனங்கள், வேறு எல்லா வழிகளிலும் செலவைக் குறைத்திருந்தால், வேலைகளைக் காப்பாற்ற ஊழியர்களின் சம்பளங்களைத் தற்காலிகமாக குறைக்கலாம் என்று மன்றம் கூறியிருந்ததைச் சம்மேளனம் சுட்டிக்காட்டியது.
இக்காலகட்டத்தில் வேலைக்குச் செல்ல முடியாத ஊழியர்களுக்கான சம்பளங்களைப் பற்றி அவர்களோடும், தொழிற்சங்கங்களோடும் கலந்து பேசி ஏற்பாடு செய்யும்படியும் சம்மேளனம் முதலாளிகளை அறிவுறுத்தியது. அத்தகைய ஊழியர்களை, மேம்படுத்தப்பட்ட வேலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் பயிற்சிக்கு அனுப்பலாம் என்றது சம்மேளனம். திட்டம் ஊழியர்களுக்குச் சம்பள உதவியையும் பயிற்சிக் கட்டணக் கழிவையும் அளிக்கிறது.

