அலெக்சாண்டிரா மருத்துவமனை வார்டு ஒன்றில் அடிப்படை தாதிமைப் பராமரிப்பு வழங்கிய 24 வயது சிங்கப்பூரர் ஒருவருக்கு கொவிட்-19 இருப்பது உறுதியானதை அடுத்து அந்த வார்டுக்குள் வருகையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் அறிவித்திருந்த புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் தொடர்பு கண்டறியப்படாத நான்கு நோயாளிகளில் அந்த மருத்துவமனை ஊழியரும் அடங்குவார்.
வார்டு பணியில் ஈடுபட்டிருந்த அந்த மருத்துவமனை ஊழியர், தனிநபர் பாதுகாப்புச் சாதனங்கள் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பின்பற்றினார் என்றும் மருத்துவமனை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த ஊழியருடன் அணுக்கமான தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களது எச்சில், சளி மாதிரிகள் திரட்டப்பட்டு வருவதால், வருகையாளர்கள் அக்குறிப்பிட்ட வார்டுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனையில் தங்கியிருந்த 31 நோயாளிகளும் அங்கு வேலை பார்க்கும் 58 ஊழியர்களும் தங்களின் பரிசோதனை மாதிரிகளை வழங்கிவிட்டதாக மருத்துவமனை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர், 10 நாட்களாக விடுப்பில் இருந்துவிட்டு திங்கட்கிழமையன்று வேலைக்குத் திரும்பினார்.
அன்று காலை, வழக்கமாக மருத்துவமனை ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்படும் கண்காணிப்புப் பரிசோதனைக்கு அவர் சென்றிருந்தார். ஆனால் அப்போது, தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் அவரிடம் காணப்படவில்லை.
இருப்பினும், சில மணி நேரத்தில் அவருக்கு இருமல் ஆரம்பித்தது. மறுநாள் வெளிவந்த அவரது பரிசோதனை முடிவு, தெளிவற்ற நிலையில் இருந்ததால் அவர் உடனே தனிமைப்படுத்தப்பட்டார்.
இரண்டாவது பரிசோதனையில் அவருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.
இதற்கிடையே, 19 மருத்துவமனை ஊழியர்களுக்கும் ஒன்பது நோயாளிகளுக்கும் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியருடன் இவர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வருகையாளர்கள் மட்டுமன்றி புதிதாக அந்த வார்டில் நோயாளிகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டது.
மருத்துவமனையின் தனிமை அறை ஒன்றில் பாதிக்கப்பட்ட ஊழியர் தங்கி இருக்கிறார் என்றும் அவர் நலமாக உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

