இலவசமாக மரினா பே சேண்ட்ஸ் ஹோட்டலில் தங்கும் சலுகையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) வழங்குவதாகக் கூறும் ஃபேஸ்புக் பதிவு ஒன்று உண்மையல்ல என்று நிறுவனம் எச்சரித்துள்ளது.
'எஸ்ஐஏ' சின்னம் தாங்கிய 'சிங்கப்பூர் ஏர்லைன்' என்ற ஃபேஸ்புக் கணக்குவழி அந்த விளம்பரம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் தளத்தின் விளம்பரப் பகுதிகளில் அது இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலவசமாக ஓர் இரவுக்கு ஹோட்டலில் தங்கலாம் என்று குறிப்பிடும் அந்த விளம்பரத்தில் இணைப்பு ஒன்று உள்ளது.
அதை சமூக ஊடகவாசிகள் 'கிளிக்' செய்த பின்னர், ஹோட்டல் சலுகைக்கு அவர்கள் தகுதிபெற, அவர்களது தனிநபர் தகவல்கள் கேட்கப்படும்.
இவ்வாறு அங்கீகரிக்கப்படாத தளங்கள் மூலம் தனிநபர் தரவுகளை வழங்கும்போது கவனம் தேவை என்று எஸ்ஐஏ நிறுவனம் எச்சரித்துள்ளது.
இப்பதிவு குறித்து அறிந்துள்ளதாக குறிப்பிட்ட எஸ்ஐஏ, இதுபோன்ற தகவல்களைப் பொதுமக்கள் பெறும்போது அவற்றைச் சரிபார்த்துக்கொள்ளுமாறும் போலிசாரிடம் புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

