கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய எட்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிங்கப்பூரில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டது. அந்த எட்டு பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள்.
அந்த எட்டு பேரும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்களுக்குத் தலா $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.
26 வயது அனபெல் மோர்கன் டியூக், 27 வயது ஃபிலிப் எட்வர்ட் நாட்ச்புல் ஹோல்ம்ஸ், 27 வயது மார்க் அலெக்சாண்டர் பெலமி, 30 வயது ஏமி ஜியோர்ஜினா ஹன்ட், 30 வயது தாமஸ் கத்பர்ட் வில்லியம்ஸ்-ஜோன்ஸ், 31 வயது ஒலிவர் ஃபிரான்சிஸ் வில்லியம் கேம்பல், 32 வயது பெஞ்சமின் டேவிட் வாட்டர்ஸ், 32 வயது ஏமி அலெக்சாண்டிரா ஸ்டீவர்ட் ஆகிய ஆறு பேரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிங்கப்பூருக்குச் சொந்தமான லசாரஸ் தீவுக்கு அருகில் உள்ள கடற்
பகுதியில் படகு ஒன்றில் ஒன்றுகூடினர். அந்தப் படகில் மொத்தம் 10 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
சமூக ஒன்றுகூடல்களில் அதிகபட்சம் ஐந்து பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற விதிமுறை அப்போது நடப்பில் இருந்தது. ஆனால் அந்தப் படகில் பத்து பேர் இருந்தனர். மேலும் அவர்கள் முகக்கவசம் அணியவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி காலை 11 மணி அளவில் செந்தோசாவில் உள்ள கோவ் அவென்யூ மரினாவில் படகின் இரு சிப்பந்திகளை அந்தப் பத்து பேரும் சந்தித்தனர்.
படகு புறப்படுவதற்கு முன்பு அந்தப் பத்து பேரை ஐந்து பேர் கொண்ட இரு குழுக்களாகப் பிரியும்படி படகு சிப்பந்திகள் கேட்டுக்கொண்டனர்.
இரு குழுக்களுக்கிடையே எவ்வித தொடர்பும் இருக்கக்கூடாது என்றும் உணவருந்தாதபோது, தண்ணீர் குடிக்காதபோது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அந்த பத்து பேருக்கு நினைவூட்டப்பட்டது.
ஆனால் படகு லசாரஸ் தீவுக்கு அருகில் இருந்தபோது அந்த பத்து பேரும் முகக்கவசம் அணியாமல் நடனம் ஆடியதை மற்றவர்கள் பார்த்தனர். அந்த பத்து பேரும் விதிமுறைகளுக்கு உட்படாமல் நடந்துகொண்டதைக் காட்டும் படங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் $10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம். விதிமுறைகளைத் தொடர்ந்து மீறுவோருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் $20,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

