சொந்த குடும்பத்தாரிடமிருந்து $57,000க்கும் அதிகமான தொகையைத் திருட 22 வயது டிஃபனி டான் ஹுவீ சுவான் திட்டம் போட்டதைத் தொடர்ந்து, அவருக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டார் அவரது காதலரான 25 வயது ஓ ஜியா காய்.
பணம் திருட ஓ ஜியா காயின் இரட்டை சகோதரர் ஓ ஜியா செங்கும் உதவினார்.
திருட்டுக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த ஓ ஜியா காய்க்கு 15 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவரது சகோதரருக்கு ஒன்பது வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
22 வயது டானுக்கு நன்னடத்தைக் கண்காணிப்புத் தண்டனை விதிப்பது குறித்து ஆராயப்படுகிறது.
வீட்டிற்குள் திருடர்கள் புகுந்து பணத்தை திருடிவிட்டதாக குடும்பத்தை நம்பவைக்க டான் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மூவரும் கடந்த மாதம் ஒப்புக்கொண்டனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதியன்று தமது தந்தையும் சகோதரரும் வீட்டில் இல்லாத சமயத்தில் தமது திட்டத்தை டான் செயல்படுத்தினார்.
ஓ ஜியா காயுடன் வெளியே சாப்பிடப் போகலாம் என்று தமது தாயாரிடம் கூறி, அவருடன் டான் புறப்பட்டார்.
காரில் ஏறியதும் கைபேசியை வீட்டிலேயே வைத்துவிட்டதாகக் கூறி வீட்டிற்குச் சென்றார் டான்.
அங்கு அவருக்காக ஓ ஜியா செங் காத்துக்கொண்டிருந்தார். வீட்டிற்குள் புகுந்த டான் தமது சகோதரரின் பாதுகாப்புப் பெட்டகத்தைத் திருடினார். அதில் $11,500 பெறுமானமுள்ள ரோலெக்ஸ் கைக்கடிகாரம், இரண்டு தங்க மோதிரங்கள், ரொக்கம் முதலியவை இருந்தன.
அதுமட்டுமல்லாது, தமது தந்தையின் பையிலிருந்து கடித உறை ஒன்றை டான் திருடினார். அதில் $34,000 ரொக்கம் இருந்தது.
வீட்டில் இருந்து விலைமிக்க பை ஒன்றையும் அவர் திருடினார்.
விட்டிற்குள் திருடர்கள் புகுந்து திருடிய கதையை மேலும் வலுப்
படுத்த தமது சகோதரரின் அறையில் இருந்த உண்டியலிலிருந்து அனைத்துப் பணத்தையும் டான் திருடினார்.
டான் வாடகைக்கு எடுத்த காருக்குள் திருடிய பொருட்களை வைக்க ஜியா செங் உதவினார்.
சில மணி நேரத்துக்குப் பிறகு வீட்டில் இருந்த பொருட்கள் மாயமானதை உணர்ந்த டானின் தந்தையும் சகோதரரும் போலிசாரை அழைத்தனர்.
தம்மீது சந்தேகம் எழாமல் இருக்க தமது பையிலிருந்த $3,000 ரொக்கத்தையும் காணவில்லை என்று டான் பொய் கூறினார்.
திருடிய பொருட்கள் மூலம் கிடைத்த பணத்திலிருந்து டானின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதியன்று அவருக்கு $3,150 மதிக்கத்தக்க பை ஒன்றை ஜியா காய் வாங்கினார். அந்தப் பைக்குள் $7,100 ரொக்கம் வைத்து டானுக்கு அவர் பரிசளித்தார்.
இதற்கிடையே, டான் வசிக்கும் கட்டடத்தின் மின்தூக்கியிலிருந்து ஜியா செங் இரண்டு கனமான பைகளைத் தூக்கிக்கொண்டு வெளியேறியதை போலிசாரின் கண்காணிப்பு கேமரா காட்டியது.
இதையடுத்து, மூவரும் அதிகாரிகளிடம் சிக்கினர்.
டான் இதுவரை $6,900ஐ தமது குடும்பத்தாரிடம் திருப்பித் தந்துள்ளார். டானுக்கு குறைந்தது ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசாங்க வழக்கறிஞர் முதலில் கேட்டுக்கொண்டார். ஆனால் குற்றம் நிகழ்ந்தபோது டானுக்கு 21 வயது.
எனவே, அவருக்குக் நன்னடத்தைக் கண்காணிப்பு தண்டனை விதிக்க நீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் 16 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்டோருக்குப் பொதுவாக நன்னடத்தைக் கண்காணிப்புத் தண்டனை விதிக்கப்படும்.
அவ்வாறு செய்வதன் மூலம் குற்றம் புரிந்தவர் என்ற பதிவு அவர்களுக்கு இருக்காது.

