காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு உதவ உள்ளூர் அற
நிறுவனமான ரஹ்மத்தான் லில் அலாமீன், இணையம் மூலம் நிதிதிரட்டும் திட்டத்தை நாளை தொடங்க இருக்கிறது.
அண்மைய சில நாட்களாக இஸ்ரேலியப் படைகளுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.
இந்த மோதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திரட்டப்படும் நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சுகாதார, நிவாரண, சமூகச் சேவைகளுக்கு இந்த நிதி பயன்
படுத்தப்படும்.
"தாக்குதல்களின் காரணமாக காஸாவில் பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். அங்குள்ளவர்கள் குறிப்பாக சிறார், ஏற்கெனவே பதற்றமான சூழலில் வாழ்ந்து கடுமையாக மனவுளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நடத்தப்படும் தாக்குதல்களால் நிலைமை மோசமடைந்துள்ளது.
"தற்போதைய நிலவரப்படி காஸாவில் 1.9 மில்லியன் பாலஸ்தீனர்கள் உள்ளனர். அவர்களில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் அகதிகளாகப் பதிவு செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது," என்று அறநிறுவனம் கூறியது.
அதுமட்டுமல்லாது, கொவிட்-19 நெருக்கடிநிலையாலும் காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேலியப் படைகளால் நடத்தப்பட்டுள்ள வான்வழித் தாக்குதல்களால் இதுவரை 228 பேர் மாண்டுவிட்டதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 12 பேர் மாண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
பேநவ் யுஇஎன் எண் 200910530ZCHQ மூலம் நன்கொடை அளிக்கலாம். அவ்வாறு பணம் அனுப்பும்போது காஸா என்று குறிப்பிடவும். Giving.SG இணையப்பக்கம் வாயிலாகவும் Muslim.SG - RLAF - Humanitarian Aid for Gaza தளம் மூலமாகவும் பணம் அனுப்பலாம்.
அல்லது ஓசிபிசி வங்கி கணக்கு (current account) எண் 601313315001 வாயிலாகவும் பணம் அனுப்பலாம்.
காசோலை மூலமாகவும் அறநிறுவனத்துக்கு நன்கொடை அளிக்கலாம். காசோலையில் பணம் பெறுபவர் பகுதியில் RLAF என்று குறிப்பிடவும். காசோலையில் பின்புறத்தில் நன்கொடையாளரின் பெயர், தொடர்பு எண், 'காஸா' என்றும் குறிப்பிடவும். காசோலையை RLAF யூசோஃப் இஷாக் பள்ளிவாசல், 10 உட்லண்ட்ஸ் டிரைவ் 17 சிங்கப்பூர் 737740 அல்லது மூயிஸ், 273 பிராடல் சாலை சிங்கப்பூர் 579702 ஆகிய முகவரிகளுக்கு அனுப்பிவைக்கவும்.
நிதிதிரட்டு இம்மாதம் 30ஆம் தேதி நிறைவடையும்.

