மளிகைப் பொருட்கள், இதர அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்குக் கொண்டு கொடுக்கும் விநியோகத் தொழிலில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்களுக்கு வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புப் பேட்டைகளில் வாகனத்தை நிறுத்தி வைப்பதற்காக சலுகை நேரம் 20 நிமிடங்களாக நாளை முதல் நீட்டிக்கப்படுகிறது.
வீவக, நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகியவற்றின் கார் பேட்டைகளில் அந்த ஓட்டுநர்கள் தங்கள் வாகனத்தை 20 நிமிடம் கட்டணமின்றி நிறுத்தி வைக்கலாம்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று ஃபேஸ்புக்கில் இந்த அறிவிப்பை விடுத்தார்.
கொவிட்-19 தொற்றைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் முன்னிலும் அதிகமான மக்கள் இப்போது வீடுகளிலேயே இருக்கிறார்கள்.
இதனால் பொருட்களை வீடுகளுக்குக் கொண்டு கொடுப்பதற்கான தேவை அதிகரித்து இருக்கிறது என்பதை அமைச்சர் சுட்டினார். கட்டணமின்றி வாகனங்களை 20 நிமிடம் நிறுத்தி வைக்கலாம் என்பதால் இத்தகைய ஊழியர்களுக்கு மேலும் காலஅவகாசம் கிடைக்கும் என்றார் அமைச்சர்.
சென்ற ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை இதேபோன்ற சலுகை நேரம் கொடுக்கப்பட்டது.
பிரபல கடைத்தொகுதிகளும் தங்கள் கார் பேட்டைகளில் சலுகை நேரத்தை 30 நிமிடமாக நீட்டித்து உள்ளன.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு அரசாங்கத்திற்குச் சொந்தமான அனைத்து கார் பேட்டைகளிலும் தனியார் பேருந்துகளை நிறுத்தி வைப்பதற்கான குறிப்பிட்ட கால கட்டணத்தைத் தள்ளுபடி செய்து இருக்கிறது. இந்தத் தள்ளுபடி வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் திரு லீ நேற்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
இதனிடையே, இப்போதைய காலகட்டத்தில் பல வாகன ஓட்டுநர்கள் பொருட்களைக் கொண்டு கொடுப்பது போன்ற கூடுதல் வேலைகளையும் செய்கிறார்கள் என்பதை நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் சுட்டினார்.
பொருட்களை வீடுகளுக்குக் கொண்டு கொடுக்கும் சேவைகளுக்கான தேவை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இத்தகைய சேவைகளில் ஈடுபட்டு இருக்கும் வாகன ஓட்டுநர்கள், தங்கள் வாகனத்தை நிறுத்தி வைக்க செலவிட வேண்டிய தொகை குறையும் என்பதால் அவர்களுக்கு உதவி கிட்டும் என்று அமைச்சர் கூறினார்.
கடைத்தொகுதிகளை நடத்துவோரும் தனியார் துறையினரும் இவ்வாறே செய்து வாகன ஓட்டுநர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் திரு ஈஸ்வரன்.

