சிங்கப்பூரில் 18 வயதும் அதற்கும் மேற்பட்ட 43 பேரில் ஒருவர் தங்களது வாழ்நாளில் மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதாவது, ஒட்டுமொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 71,600 பேர் அப்பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.
சுகாதார அமைச்சு மற்றும் தெமாசெக் அறநிறுவனத்தின் நிதி ஆதரவில், சுகாதார அமைச்சும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் இணைந்து 2016-2018 ஆண்டுகளுக்கு இடையே '2016 சிங்கப்பூர் மனநல ஆய்வை' மேற்கொண்டன. மொத்தம் 6,126 பேர் பங்கேற்ற அந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
சிங்கப்பூர்வாசிகளில் 18 வயதும் அதற்கும் மேற்பட்டோரிடத்தில் மனநலக் குறைபாடு, அதுசார்ந்த காரணிகள், சிகிச்சை இடைவெளி போன்றவை குறித்து தேசிய அளவில் ஆய்வு நடத்தப்பட்டது இதுவே முதன்முறை.
மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் மருட்சி, மாயத்தோற்றம், ஒழுங்கற்ற எண்ணங்கள், இயல்பிற்கு மாறாக இயங்குதல் ஆகியவற்றில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட நடவடிக்கைகளோ தென்படலாம்.
'ஸ்கிட்ஸோஃபிரெனியா' எனும் மனச்சிதைவே சிங்கப்பூரில் ஆக அதிகமானோரிடத்தில் காணப்படும் மனநலக் குறைபாடாகக் கூறப்படுகிறது. 116 பேரில் ஒருவரிடம், அதாவது 26,800 பேர் தங்களது வாழ்நாளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் அக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
மனச்சிதைவால் பாதிக்கப்பட்டு உள்ள ஒருவரிடம் மருட்சி, மாயத்தோற்றம், ஒழுங்கற்ற நடத்தை, சமூகத்திலிருந்து விலகி இருத்தல், கவனக் குறைபாடு உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படலாம்.
சராசரியாக 23.1 வயதில் மனநலக் குறைபாடு ஏற்பட்டதும் அந்தப் பாதிப்பு உள்ளோர் வேலை இன்றி இருக்க 4.3 மடங்கு வாய்ப்பிருந்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆயினும், மனநலக் குறைபாட்டிற்கும் வேலையின்றி இருந்ததற்கும் நேரடித் தொடர்பு இருக்கலாம் என ஆய்வாளர்களால் உறுதியாகக் கூற இயலவில்லை.
மனநலக் குறைபாடுள்ளோரில் குறைந்தது 80.4 விழுக்காட்டினர் தங்களிடம் தோன்றும் அறிகுறிகளுக்காக உதவி நாடியுள்ளனர்.
மற்ற மனநலப் பிரச்சினைகளைப் போல் மனநலக் குறைபாடு பொதுவானது அல்ல என்றும் மனநலக் குறைபாட்டால் இறப்பு போன்ற வேறு பல பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்றும் சொன்னார் இந்த ஆய்வின் முதன்மைப் புலனாய்வாளரும் மனநலக் கழகத்தின் ஆய்வு, மனநோய்ப் பிரிவின் மூத்த ஆலோசகருமான பேராசிரியர் சோங் சியாவ் ஆன்.
"மே 24, உலக மனச்சிதைவு நாளாக அனுசரிக்கப்படும் நிலையில் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருப்பது சரியான நேரத்தில் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. முன்கூட்டியே கண்டறிந்து, தலையிடுவதன் மூலம் பல ஆயிரக்கணக்கானோரின் துயரத்தையும் பாதிப்பையும் போக்கி, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்," என்றார் அவர்.

