டான் டோக் செங் மருத்துவமனையில் கொவிட்-19 தொற்று மையமாக விளங்கிய '9D' உள்நோயாளி சிகிச்சைப் பிரிவு, நோயாளிகளையும் பணியாளர்களையும் சிறந்த முறையில் பாதுகாக்கவல்ல மேம்பட்ட வசதிகளுடன் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது.
அதேபோல, அங்கு மூடப்பட்ட இன்னொரு சிகிச்சைப் பிரிவான '9C'யும் இன்றிலிருந்து மீண்டும் திறக்கப்படவுள்ளது. 7D, 10B ஆகிய சிகிச்சைப் பிரிவுகள் ஏற்கெனவே மீண்டும் திறக்கப்பட்டுவிட்டன.
நல்ல காற்றோட்டத்திற்கும் காற்றுத் தூய்மைப்படுத்தலுக்கும் ஏதுவாக, 9D சிகிச்சைப் பிரிவில் காற்றுப்போக்கிகளும் 'ஹெப்பா' வடிகட்டிகளும் நிறுவப்பட்டுள்ளன. இவ்வார இறுதிக்குள் அம்மருத்துவமனையின் மற்ற எல்லா சிகிச்சைப் பிரிவுகளிலும் அவை நிறுவப்படும்.
இதுவரை அம்மருத்துவமனைப் பணியாளர்களில் 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இணைப் பேராசிரியர் பெர்னார்ட் ஓங் தெரிவித்துள்ளார்.

