ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் நேற்று நிகழ்ந்த விபத்து ஒன்றில் லாரி ஓட்டுநர் அவரது இருக்கையிலேயே சிக்கிக்கொண்டார்.
தோ குவான் ரோடு-தோ குவான் ரோடு ஈஸ்ட் சந்திப்பில் நிகழ்ந்த வேன்-லாரி மோதலில் லாரியின் முன்
பகுதி பலத்த சேதமடைந்தது.
ஓட்டுநரின் இருக்கைப் பகுதி நசுங்கியது. லாரியின் வேக விசைக்கும் நிறுத்து விசைக்கும் இடையில் ஓட்டு
நரின் கால்கள் சிக்கிக்கொண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
காலை 10.15 மணியளவில் தமக்கு இவ்விபத்து தொடர்பாக உதவி கேட்டு அழைப்பு வந்ததாகவும் ஜூரோங், கிளமெண்டி தீயணைப்பு நிலையங்களில் இருந்து அவசரநிலைக் குழுவினர் சம்பவ இடத்தை நோக்கி விரைந்து சென்றதாகவும் அந்தப் பதிவில் எஸ்சிடிஎஃப் தெரிவித்தது. குறிப்பாக, "பேரிடர் உதவி, மீட்புக் குழுவினரும் அங்கு சென்றனர். அவர்கள் குறுகிய ஓட்டுநர் அறைப் பகுதியில் 'ஹைட்ராலிக்' மீட்புச் சாதனம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி, நசுங்கிய பகுதியை வெட்டினர். அதன் பின்னர் ஓட்டுநரை அவர்கள் மீட்டனர்," என எஸ்சிடிஎஃப் கூறியது.
மீட்புப் பணி முழுவதும் ஓட்டுநரின் நிலையை மருத்துவ உதவிக் குழுவினர் கண்காணித்தபடி இருந்ததாகவும் அது அந்த ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
இந்த மீட்புப் பணி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்தது. சுயநினைவுடன் இருந்த அவர் பின்னர் சிகிச்சைக்காக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இவ்விபத்தில் தொடர்புடைய வேனின் ஓட்டுநர், இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இவரும் சுயநினைவுடன் இருந்தார்.

