அண்டை வீட்டுக்காரரான செங்காங் பொது மருத்துவமனை தாதியை துன்புறுத்தியதாக தம்பதி மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
வேண்டுமென்றே துன்புறுத்திய இரு குற்றச்சாட்டுகளை சியாங் எங் ஹாக், 56, என்பவரும் அதேபோன்ற ஐந்து குற்றச்சாட்டுகளோடு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த ஒரு குற்றச்சாட்டை இவரது மனைவி லிம் சோக் லே, 48, என்ற மாதும் எதிர்நோக்கினர்.
பொங்கோலில் உள்ள வீவக புளோக்கில் கடந்த ஆண்டு மே மாதம் அண்டை வீட்டுக்காரர்களை வார்த்தைகள் மூலமும் நடத்தை வாயிலாகவும் துன்புறுத்தியதாக ஏற்கெனவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அண்டை வீட்டாரை நோக்கி அந்தத் தம்பதியினர் கிருமி நாசினி தெளித்ததாகவும் சொல்லப்பட்டது.
மேலும், இவ்வாண்டு ஜனவரி 8ஆம் தேதி செங்காங் பொது மருத்துவமனை சென்ற தம்பதியர், அங்கு வேலை செய்துகொண்டிருந்த ஆடவரான தாதியை அவர்கள் வார்த்தைகளால் அவமதித்தனர்.
'இந்த தாதி ஒரு குண்டர்' என்றும் 'அவர் நல்லவர் அல்ல' என்றும் 'மோசமான தாதி' என்றும் தம்பதியினர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஆடவர் முகம்மது நஜிப் இங்கசெவான் என்று அடையாளம் காணப்பட்டது. அவரது மனைவியும் அத்தியாவசியச் சேவையில் பணிபுரிபவர் என்று 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' அறிகிறது.
கடந்த ஆண்டு மே 13க்கும் மே 15க்கும் இடைப்பட்ட நாட்களில் 'கிருமியைப் பரப்புபவர்' என்றும் 'கிருமி குடும்பம்' என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நோக்கி வார்த்தைககளால் இத்தம்பதி துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி தங்களது பக்கத்து வீட்டில் கிருமி நாசினி திரவத்தை லிம், தெளித்ததோடு அதற்கு அடுத்த மாதம் மற்றொரு வீட்டுக்காரரை நோக்கி தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது.
இச்சம்பவங்கள் தவிர, இவ்வாண்டு பிப்ரவரி 21ஆம் தேதி ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள நீ ஆன் சிட்டி கடைத்தொகுதிக்குச் சென்ற தம்பதியினர், அங்கு தேவையின்றி உரக்கக் கத்தியதாகவும் அங்கிருந்த போலிஸ் பெண்மணி பலமுறை எச்சரித்த பின்னரும் அவர்
களின் கூச்சல் தொடர்ந்ததாகவும் நீதிமன்ற விசாரணையின்போது கூறப்பட்டது.

