பெருந்தொற்றுகளுக்கு எதிரான போரில் அனைத்துலக அளவில் அணுக்கமான, பலதரப்பு ஒத்துழைப்பு மிக இன்றியமையாதது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் ரோம் நகரில் நேற்று முன்தினம் நடந்த 'ஜி20' உலகளாவிய சுகாதார உச்சநிலை மாநாட்டில் மெய்நிகர் வழியாகக் கலந்துகொண்டு பேசிய பிரதமர் லீ, ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இல்லாதவரையிலும் ஒரு பெருந்தொற்றின்போது எந்த ஒரு நாட்டிற்கும் பாதுகாப்பு இல்லை என்பதை திரும்பத் திரும்ப வீசும் கொவிட்-19 அலை காட்டுகிறது என்று கூறினார்.
இந்தச் சிரமமான காலகட்டத்திலும், விநியோகத் தொடரைச் சீரமைப்பதிலும் வெளிநாடுகளில் சிக்கியிருந்த குடிமக்களைத் தாய்நாடு திரும்பச் செய்வதிலும் மருத்துவத் தளவாடங்களைப் பகிர்ந்துகொள்வதிலும் உலக நாடுகள் இணைந்து செயல்பட்டு வருவதாக திரு லீ குறிப்பிட்டார்.
எல்லா நாடுகளுக்கும், குறிப்பாக வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில், 'கொவேக்ஸ்' போன்ற தடுப்பூசி பன்முகத்தன்மை திட்டங்களை நாடுகள் ஆதரித்ததாகவும் அவர் சொன்னார்.
உலகை இன்னும் கொரோனா நோய்ப் பரவல் சூழ்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், "இதுவே கடைசியாகவும் ஆக மோசமாகவும் நாம் எதிர்கொள்ளும் பெருந்தொற்றாக இருந்துவிடாது. கூடிய விரைவிலோ அல்லது பிற்காலத்திலோ, அதிகம் பரவக்கூடிய அல்லது ஆபத்தான தொற்று உருவெடுக்கலாம். ஆகையால், கொரோனா தொற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த பெருந்தொற்றை எதிர்கொள்ள நாம் ஆயத்தமாக வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.
உலகளாவிய சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த ரோம் கோட்பாடுகள் பிரகடனத்தைச் சிங்கப்பூர் முழுமையாக ஆதரிப்பதாகவும் திரு லீ சொன்னார்.

