டௌன்டவுன் எம்ஆர்டி ரயில் பாதையில் இன்று (மே 23) காலை சென்றுகொண்டிருந்த ரயிலில் ஆடவர் ஒருவர் மற்றோர் ஆடவரை கடுமையாகத் தாக்கிய சம்பவம் ஒன்று காணொளியில் பதிவானது.
அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொது இடத்தில் தொந்தரவு விளைவித்ததற்காக அந்த 40 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாகவும் மற்றொருவருக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததற்காக அவர் மீது விசாரணை நடத்தப்படும் என்றும் போலிஸ் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த 24 வயது ஆடவருடன் அந்த 40 வயது ஆடவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலிஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்தில் நிகழ்ந்த இந்தத் தாக்குதல் குறித்து போலிசுக்கு இன்று காலை 10.15 மணியளவில் தகவல் கிடைத்தது.
எனினும், சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அதிகாரிகள் வந்தபோது, இதில் சம்பந்தப்பட்ட அந்த இரு ஆடவர்களும் அங்கு காணப்படவில்லை.
அந்த ஆடவர்கள் இருந்த ரயில் ரோச்சர் எம்ஆர்டி நிலையத்தைச் சென்றடைந்தபோது, தரையில் கிடந்த 24 வயது ஆடவரை அந்த 40 வயது ஆடவர் கடுமையாக தாக்குவதை அந்தக் காணொளி காட்டியது.
தாக்குதலுக்கு ஆளான அந்த 24 வயது ஆடவர், வலியால் கூச்சலிட்டார். அங்கிருந்த பொதுமக்கள் அவர்களைவிட்டு நகர்ந்தனர்.
பின்னர் அந்தச் சந்தேக ஆடவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.