ஜூரோங்கில் உள்ள 'ஜெம்', 'வெஸ்ட்கேட்' கடைத்தொகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நேற்று தீவிரமாக நடந்தன. ஒரு சில கடைக்காரர்கள் தங்களின் இருப்புகளை வேறு கிளைக்கு அனுப்புவதற்காக கடைக்கு வெளியே வைத்திருந்தனர். வந்த வாடிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
நேற்று முதல் பாலம் ஒன்றால் இணைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு கடைத்தொகுதிகளும் மூடப்பட்டன. இரு வாரங்களுக்குப் பிறகு ஜூன் 6ஆம் தேதியன்று அவை மீண்டும் திறக்கப்படும்.
தொடர்புகள் கண்டறியப்படாத கொவிட்-19 நோயாளிகள், இந்த இரு கடைத்தொகுதிகளுக்கும் சென்றிருந்ததை அடுத்து அங்கு கொவிட்-19 பரவலைத் தடுக்கவும் கடைத்தொகுதி வளாகத்தை முற்றிலுமாக சுத்தப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இரண்டு கடைத்தொகுதிகளிலும் தலா 250 சில்லறை வர்த்தகங்கள் உள்ளன. இதற்கிடையே, வெஸ்ட்கேட் கடைத்தொகுதி உரிமையாளர் 'கேப்பிட்டலேண்ட்', கடைக்காரர்களுக்குத் தேவையான உதவியை நல்கும் என்று கூறியுள்ளது.
சமூகத்தில் 21 பேர்,
தங்குவிடுதியில் ஒருவர் பாதிப்பு
சமூக அளவில் 21 பேர் உட்பட சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 25 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
சமூகத்தில் கிருமி தொற்றியவர்களில் மூவருக்கும் முன்னதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பு ஏதும் கண்டறியப்படவில்லை. எஞ்சிய 19 பேரும் முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்களில் 12 பேர் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுவிட்டனர்.
இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் புதிதாக ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோக, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த மூன்று பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,824ஐ எட்டியுள்ளது.