சிங்கப்பூரின் கொவிட்-19 நிலவரம் மோசம் அடைந்து வருவதாக கூறுவது தவறு

2 mins read
65148f59-e932-4bc5-807b-07234b65cd2e
-

மக்களிடையே எழும் கேள்விகளுக்கு சுகாதார அமைச்சர் ஓங் பதில்

கொவிட்-19 நோயா­ளி­களில் 78 பேருக்கு ஏற்­கெ­னவே தடுப்­பூசி போடப்­பட்­டு­விட்­டது. இவர்­களில் பலர் முன்­க­ளப் பணி­யா­ளர்­கள். சுமார் 300 கொவிட்-19 நோயா­ளி­களுக்கு இன்­ன­மும் தடுப்­பூசி போடப்­ப­ட­வில்லை என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் அண்­மைய கிரு­மிப் பர­வல் நில­வ­ரம் குறித்து நேற்று தெரி­வித்­தார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட கிட்­டத்­தட்ட 21 விழுக்­காட்­டி­ன­ரும் போடாத சுமார் 79 விழுக்­காட்­டி­ன­ரும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டது இத்­த­க­வ­லின் அடிப்­ப­டை­யில் தெரிய வரு­கிறது. தொற்­று­கள், கடும்­நோய்­கள் ஆகி­ய­வற்­றைத் தடுக்­கும் செயல்­தி­றன் தடுப்­பூ­சி­களுக்கு அதி­க­முண்டு என்று அனைத்­து­லக ஆய்­வு­கள் குறிப்­பிட்­டி­ருப்­ப­தை­யும் அவர் சுட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 நில­வரம் குறித்து மக்­கள் பொது­வாக எழுப்பி வரும் கேள்­வி­க­ளைத் தொகுத்­துத் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் அமைச்­சர் ஓங் பதில்­க­ளு­டன் பதி­விட்­டி­ருந்­தார். தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பின்­பும் தொற்று ஏற்­பட்­ட­தால், தடுப்­பூ­சி­யால் ஏது பயன் என்று சிலர் கேட்­டி­ருந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார். அதற்­குப் பதி­லளிக்­கும் வகை­யில் இத்தக­வல்­களை அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

புதிய 'பி1617' குறித்து...

இந்­தி­யா­வில் முதன்­மு­த­லில் கண்­ட­றி­யப்­பட்ட 'பி1617' உரு­மா­றிய கொரோனா கிருமி குறித்­தும் கேள்வி கேட்­டப்­பட்­டது.

காற்­றில் பர­வக்­கூ­டி­யது என்­றும் தொற்று ஆற்­றல் அதி­கம் உள்­ளது என்­றும் 'பி1617' உரு­மா­றிய கிரு­மி­யைப் பற்றி கூறப்­படும் தக­வல் உண்­மையா என்று கேட்­கப்­பட்­டது.

பொது­வாக கொவிட்-19 போலவே இக்­கு­றிப்­பிட்ட உரு­மாறிய கிரு­மி­யின் தன்­மை­யும் உள்­ளது என்று கூறிய திரு ஓங், ஒரு­வ­ரின் இறு­மல், தும்­மல், பேச்சு வழி காற்­றில் பர­வும் அதே ஆற்­றல் உள்­ளது என்­றார்.

நெருக்­க­மான இடங்­களில் முகக்­க­வ­ச­மின்றி நடந்த சந்­திப்­பு­க­ளின்­போது பெரும்­பா­லான தொற்­றுச் சம்­ப­வங்­கள் ஏற்­பட்­ட­தாக நம்­பப்­படு­கிறது. இத­னால், உண­வ­கங்­களில் உட்­கார்ந்து சாப்­பி­டு­வ­தற்­கும் பெரு­ம­ள­வில் ஒன்­று­கூ­டு­வ­தற்­கும் அர­சாங்­கம் தடை­வி­தித்­தது.

"இத­னால்­தான், தற்­போ­தைய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளில் அதி­க­மா­னவை வீட்­டில் பர­வி­ய­வை­யாக உள்­ளன. அத­னால் உடல்­ந­ல­மில்லை என்­றால் குடும்ப உறுப்­பினர்­க­ளைப் பாது­காக்க, உடனே மருத்­து­வ­ரைச் சென்று பாருங்­கள்," என்று அறி­வு­றுத்­தி­னார் அமைச்­சர் ஓங்.

சிங்­கப்­பூ­ரின் கொவிட்-19 நில­வரம் மோச­ம­டைந்து வரு­வ­தா­கக் கூறு­வது உண்­மை­யல்ல என்­றும் அவர் குறிப்­பிட்­டார். மே 16 முதல் பதி­வாகி வரும் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களை ஆரா­யும்­போது, சமூ­கத் தொற்­றுச் சம்­ப­வங்­கள் மற்­றும் தொடர்பு கண்­ட­றி­யப்­ப­டாத சமூ­கத் தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் மூன்று நாள் சரா­சரி எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட அதே நிலை­யில் உள்­ள­தாக அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

தீவிர பரிசோதனைகள் குறித்து...

குறிப்­பிட்ட சில வீவக கட்­ட­டங்­களில் வசிப்­போ­ருக்கு கொவிட்-19 பரி­சோ­தனை செய்­யப்­ப­டு­வ­தால் நிலைமை மோசம் என்று சொல்­லி­விட முடி­யாது என்றார் அவர்.

"கிரு­மிப் பர­வல் ஏற்­ப­டு­வ­தைத் தடுக்­கும் பய­னுள்ள ஒரு வழி, பரி­சோ­தனை செய்­வது. இத்­த­கைய பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­கள் நடப்­ப­தால் தொற்று அறி­கு­றி­கள் உள்­ள­வர்­கள் அல்­லது இல்­லா­த­வர்­களை உடனே கண்­ட­றிந்து விரைந்து தனி­மைப்­ப­டுத்த முடி­கிறது," என்­றார் திரு ஓங்.