கட்டுமானத் துறையை விடாமல் துரத்துகிறது, கொவிட்-19 கொள்ளைநோய். தெற்காசிய ஊழியர் தொடர்பான தடைவிதிப்பால் கட்டுமானத் துறை சந்தித்து வந்த மனிதவளப் பிரச்சினை மேலும் மோசமாகியுள்ளது.
இதனால், இரு மடங்கு சம்பளம் தருவதாகக் கூறி ஒரு சில கட்டுமான நிறுவனங்கள், தங்களின் மனிதவளப் பிரச்சினையைச் சமாளித்து வருவதாகக் கூறப்படுகிறது.
வேலையிட விபத்துகளும் அதிகரித்துள்ளன. இவ்வாண்டு ஜனவரி மாதத்திற்கும் மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் 3,300 வேலையிட விபத்துகள் நேர்ந்தன.
கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 3,100 சம்பவங்கள் நடந்தன.
கிருமி முறியடிப்பு காலம் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து ஒரு வாரத்தில் சராசரியாக 1,000 கட்டுமான ஊழியர்கள் நாட்டைவிட்டுச் சென்றுவிட்டனர்.
அதிகரிக்கும் தொற்றுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த, எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. விட்டுச் சென்ற ஊழியர்களின் இடத்தை நிரப்ப நிறுவனங்கள் திண்டாடின.
மனிதவள அமைச்சு வழங்கிஇருந்த தகவலின்படி, கட்டுமானம், கடல்துறை, செயல்முறைத் தொழில்துறைகளில் டிசம்பர் 2019ல் 370,100 வெளிநாட்டவர்கள் வேலை பார்த்தனர். ஆனால் சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 311,000ஆகக் குறைந்தது.
கிருமி முறியடிப்புக் காலகட்டம் சென்ற ஜூன் மாதம் முடிவடைந்தபோது முக்கியமான உள்கட்டமைப்பு, கட்டடத் திட்டங்களுக்காக வேலை பார்க்க சுமார் 30,000 கட்டுமான ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் கட்டுமானத் துறையில் 50,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேவைப்படுவதாக துறைசார்ந்த பங்குதாரர்கள் மதிப்பிடுகின்றனர்.
பாதுகாப்பான, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூருக்குள் அனுமதிக்குமாறு கட்டுமானத் துறை மற்றும் கட்டடச் சூழல் பிரிவின் முக்கிய பிரதிநிதிகள் சென்ற வாரம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எல்லைகள் நீண்டகாலத்திற்கு மூடப்பட்டால் மனிதவளச் சவால்கள் மேலும் கடுமையாகிவிடும் என்று அவர்கள் கூறியிருந்தனர்.
கட்டுமானத் திட்டங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்துவிடவேண்டும் என்ற அழுத்தமும் குத்தகைதாரர்கள் மீது உள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊழியர்களை வேலைக்கு அழைக்க வேண்டியுள்ளது என்று கூறப்படுகிறது.
இதனால் ஊழியர்கள் மேலும் களைப்படையலாம். மேலும் அதிக சுகாதார, வேலையிட அபாயங்களுக்கு ஆளாகும் நிலையும் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, மனிதவளத் தட்டுப்பாடைச் சமாளிக்கும் வகையில் சீனாவிலிருந்து வரும் ஊழியர்கள் தொடர்பிலான விதிகளைச் சென்ற மாதம் கட்டட, கட்டுமான ஆணையம் தளர்த்தியது.
அதன்படி, சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பாக தங்களின் திறன்சார்ந்த சான்றிதழை ஊழியர்கள் தங்களது நாட்டில் முடிக்கத் தேவைஇல்லை.
இந்நிலையில், கட்டுமானம் சார்ந்த முக்கியமான சுகாதாரப் பராமரிப்பு, வீடமைப்பு, உள்கட்டமைப்புத் திட்டங்கள் சில முடிவடையத் தாமதமாகியுள்ளன.
தற்போது 89 தேவைக்கேற்பக் கட்டித்தரப்படும் (பிடிஓ) வீட்டுத் திட்டங்கள் உள்ளன. ஒரு சில பிடிஓ திட்டங்கள் முடிவதற்கு மேலும் ஓராண்டு அல்லது அதற்கும் மேல் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
சாங்கி விமான நிலையத்தின் முனையம் ஐந்துக்கான கட்டுமான வேலைகளும் குறைந்தது ஈராண்டு காலமாக நிறுத்தப்பட்டுள்ளன.

